ஜெய்ப்பூரில் அமிதாப் பச்சன் குடும்பம் முகாம்
ஜெய்ப்பூர்: மும்பையில் வட இந்தியர்களுக்கு எதிரான தாக்குதல் நடந்து வருவதன் பின்னணியில், நடிகர் அமிதாப் பச்சன் குடும்பத்தோடு ஜெய்ப்பூருக்கு வந்துள்ளார்.
அமிதாப் பச்சன் குறித்து ராஜ் தாக்கரே சரமாரியாக புகார் கூறப் போக தற்போது மும்பையில் வட இந்தியர்களைக் குறி வைத்து தாக்குதல் நடந்து வருகிறது. மும்பை தவிர தானே, நாசிக் ஆகிய நகரங்களிலும் வட இந்தியர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.
மும்பை ஜூஹுவில் உள்ள அமிதாப் பச்சன் வீடு மீது சோடா பாட்டில் வீசித் தாக்கப்பட்டது.
இந்த நிலையில் அமிதாப் குடும்பத்தினர் யாரும் நேற்று மும்பையில் இல்லை. அனைவரும் ஜெய்ப்பூருக்கு வந்துள்ளனர். முதலில் அபிஷேக் பச்சனும், அவரது மனைவி ஐஸ்வர்யாவும் ஜெய்ப்பூர் வந்தனர். படப்பிடிப்புக்காக அவர்கள் வந்ததாக கூறப்பட்டது.
இந்த நிலையில் அமிதாப் பச்சனும், மனைவி ஜெயாவுடன் நேற்று ஜெய்ப்பூர் வந்தார். கூடவே சமாஜ்வாடி கட்சி பொதுச் செயலாளர் அமர்சிங்கும் வந்தார்.
சிம்லாவில் படப்பிடிப்பில் இருந்த அமிதாப், படப்பிடிப்பை விட்டு விட்டு ஜெய்ப்பூர் வந்துள்ளார்.
மொத்தக் குடும்பமும் ஜெய்ப்பூரில் திரண்டிருப்பதால் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. இருப்பினும், இந்த சந்திப்பில் எந்த விசேஷமும் இல்லை, அபிஷேக் பச்சனின் பிறந்த நாளைக் கொண்டாடவே அமிதாப் குடும்பத்தினர் ஜெய்ப்பூரில் குழுமியுள்ளனர் என்று ஒரு தகவல் தெரிவிக்கிறது.
அமிதாப் வீட்டில் பாட்டில் வீச்சு