தமிழக மீனவர்கள் சுட்டதாக இலங்கை கடற்படை புகார்
கொழும்பு: தமிழக மீனவர்கள் தங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இலங்கை கடற்படை மத்திய அரசிடம் புகார் தெரிவித்துள்ளது.
வழக்கமாக தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டு 'விளையாடுவது'தான் இலங்கை கடற்படையின் வழக்கம். ஆனால் விநோதமாக, தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படை ரோந்துப் படகு மீது சுட்டு சேதப்படுத்தி விட்டதாக இலங்கை கடற்படை புகார் கூறியுள்ளது.
இதுகுறித்து இலங்கை கடற்படை கமாண்டர் டி.கே.பி.தசநாயகே கூறுகையில், வடக்கு தலைமன்னாரில் இருந்து 4 கி.மீ.தூரத்தில் 400க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் எங்கள் கடற்பகுதியில் அனுதியில்லாமல் நுழைந்து மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அவர்களிடம் ரோந்து சென்ற எங்கள் கடற்படையினர் விசாரணை நடத்தியதற்கு, அவர்கள் மீது மீனவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
இதில் எங்கள் கடற்படையினர் சென்ற படகு சேதம் அடைந்துள்ளது.
விடுதலைப்புலிகள் பிரிவைச் சேர்ந்த கடற்புலிகள் மீனவர்களுடன் சேர்ந்து இலங்கை கடற்படையினர் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள். விடுதலைப்புலிகளுக்கு மீனவர்கள் உதவி செய்வதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இந்திய மீனவர்கள் மீண்டும் இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைவது இருநாடுகளுக்கும் இடையே அதிக பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதுகுறித்து இலங்கை அரசும், இலங்கை கடற்படையும் கொழும்புவில் உள்ள இந்திய தூதரகத்திடம் புகார் தெரிவித்துள்ளன.
இந்திய மீனவர்கள் அத்துமீறி இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அத்துமீறி நுழையும் மீனவர்கள் மீது நாங்கள் தாக்குதல் நடத்தினால் தேவையில்லாத விளைவுகள் ஏற்படும்.
அதனால் இதுகுறித்து தயவு செய்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரம் குறித்து இந்திய அரசின் பதிலுக்காக நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை கடற்படையின் இந்தப் புகார் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.