செங்கோட்டை-சென்னை ரயில் நாளை முதல் தொடக்கம்

தமிழக - கேரள மாநிலங்களின் எல்லை பகுதியான செங்கோட்டையில் 1901ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் மேற்கு தொடர்ச்சி மலையை குடைத்து ரயில் பாதை அமைக்கப்பட்டது.
இப்பாதையில் கடந்த 1996ம் ஆண்டு மீட்டர் கேஜ் பாதையில் இயங்கி வந்த பல்வேறு ரயில்கள் நிறுத்தப்பட்டன. இதில் கொல்லம், சென்னை, செங்கோட்டை ரயில்களும் அடங்கும்.
அதன்பின் செங்கோட்டை-விருதுநகர் இடையே அகல ரயில் பாதை அமைக்கப்பட்டது.
இந்த வழியில் விருதுநகர் முதல் தென்காசி வரை அகல ரயில் பாதை அமைக்கப்பட்டு இப்பாதையில் வாரத்தில் 7 நாட்களும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வந்தது.
தென்காசி-செங்கோட்டை இடையே 7 கிமீ அகல ரயில் பாதை அமைக்கும் பணி 4 ஆண்டு காலமாக நடந்து முடிந்து பல மாதங்கள் ஆகியும் இந்த தடத்தில் ரயில் இயக்கப்படவில்லை.
இதனால் பல்வேறு அரசியல் கட்சிகள் பொதுமக்களுடன் சேர்ந்து ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தி ஏராளமான கோரிக்கை மனுக்களும் அனுப்பப்பட்டன.
இதன் பின்னர் தென்காசி-செங்கோட்டை பாதையில் பல்வேறு கட்ட சோதனை நடத்தப்பட்டு ரயில்கள் இயக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
எனவே நாளை முதல் செங்கோட்டையிலிருந்து, சென்னை எழும்பூருக்கு ரயில் இயக்கத்தினை காலை 11 மணிக்கு மத்திய ரயில்வேத்துறை இணை அமைச்சர் ஆர்.வேலு தொடங்கி வைக்கிறார்.
இவ்விழாவில் தமிழக விளையாட்டு துறை அமைச்சர் மைதீன் கான், நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை, சட்டமன்ற உறுப்பினர்கள், பொது மேலாளர் ராகேஷ் சோப்ரா, கோட்ட மேலாளர் ஹேமந்த் குமார் உள்ளிட்ட ஏராளமான அதிகாரிகள், உள்ளாட்சி நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.












Click it and Unblock the Notifications