சர்கோஸி மனைவியின் போட்டி கல்யாணம்

அதிபர் சர்கோஸி தனது காதலியும், முன்னாள் சூப்பர் மாடலுமான கார்லா ப்ரூனியை கடந்த வாரம் திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் அவரால் விவாகரத்து செய்யப்பட்ட மனைவியான செசிலியா மறுமணத்திற்குத் தயாராகி விட்டார். இருவரும் விவாகரத்து செய்து 3 மாதங்கள்தான் ஆகிறது.
கோடீஸ்வரரான ரிச்சர்ட் அட்டியாஸை, செசிலியா மணக்கவுள்ளார். சர்கோஸியை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு அட்டியாஸைத்தான் காதலித்து வந்தார் செசிலியா. கல்யாணத்திற்குப் பிறகும் அட்டியாஸ் - செசிலியா நட்பு தொடர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த மாதம் செசிலியா, அட்டியாஸ் திருமணம் நடக்கவுள்ளதாம்.
விவாகரத்து செய்த வேகத்தில் ப்ரூனியை சர்கோஸி கைப்பிடித்ததால் செசிலியா கோபமடைந்திருப்பதாகவும், இதனால்தான் அவரும் மறுமணத்திற்குத் தயாராகி விட்டதாகவும் செசிலியாவின் நட்பு வட்டாரம் தெரிவிக்கிறது.
மேலும் செசிலியாவுக்கு, சர்கோஸி 12 ஆண்டுகளுக்கு முன்பு போட்ட கல்யாண மோதிரத்தை ப்ரூனி கேட்டு வாங்கி அதைத்தான் கல்யாணத்தின் போது சர்கோஸி மூலம் போடச் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுவும் செசிலியாவை எரிச்சல்படுத்தியதாம்.
சர்கோஸி, அவரது காதல், அவரது முன்னாள் மனைவியின் திருமணம் என அடுத்தடுத்து பரபரப்பு நிகழ்வுகளால் பிரான்ஸில் சலசலப்புக்கு பஞ்சமே இல்லாமல் போய் விட்டது.












Click it and Unblock the Notifications