முல்லைப் பெரியாறு: மேலும் ஒரு வழக்கு பதிவு - 26ம் தேதி விசாரணை
டெல்லி: முல்லைப் பெரியாற்றின் குறுக்கே கேரள அரசு புதிய அணை கட்ட அனுமதி தரக் கோரி தொடரப்பட்டுள்ள வழக்கு உச்சநீதிமன்றத்தில் பிப்ரவரி 26ம் தேதி விசாரணைக்கு வருகிறது.
முல்லைப் பெரியாற்றின் குறுக்கே 113 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய தற்போதைய அணைக்குப் பதிலாக புதிய அணை கட்ட கேரள அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு தமிழகம் கடும் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்து வருகிறது.
இந்த நிலையில் ஜனசக்தி என்கிற என்.ஜி.ஓ. அமைப்பின் தலைவரும், முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியும், எம்.எல்.ஏவுமான கே.ஜே. அல்போன்ஸ் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
அதில், முல்லைப் பெரியாற்றின் குறுக்கே உள்ள தற்போதைய அணைக்கட்டு தனது வாழ்நாளை ஏற்கனவே முடித்து விட்டது. அந்த அணைக்கு எப்போது வேண்டுமானாலும் ஆபத்து நேரிடலாம். அதனால் இடுக்கி அணைக்குத்தான் பேராபத்து உள்ளது. மேலும் முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் பல லட்சம் பேரின் உயிர்களும் பலியாகி விடும்.
எனவே மக்கள் தங்களது உயிருக்கு பாதுகாப்பு கோருவது அடிப்படை உரிமையாகும். அதை யாரும் புறக்கணித்து விட முடியாது. முல்லைப் பெரியாறு அணையின் மூலம் தமிழக அரசு ஆண்டுக்கு ரூ. 650 கோடி மதிப்பிலான தண்ணீர், மின்சாரம் ஆகியவற்றை பயன்படுத்தி வருகிறது.
எனவே மிகவும் அபாயகரமானதாக மாறியுள்ள முல்லைப் பெரியாறு அணையின் செயல்பாட்டை நிறுத்த உத்தரவிட வேண்டும்.
கேரள அரசு புதிய அணை கட்ட உத்தரவிட வேண்டும். அதைத் தடுக்கக் கூடாது என தமிழகத்திற்கும் உத்தரவிட வேண்டும். மேலும் அணை கட்ட ஆகும் செலவினை தமிழகம் ஏற்றுக் கொள்ளவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார் அல்போன்ஸ்.
இந்த மனுவை நேற்று பரிசீலித்த தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதி ஆர்.வி.ரவீந்திரன், ஜே.எம்.பன்சால் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், முல்லைப் பெரியாறு அணை தொடர்பான அனைத்து வழக்குகளும் ஒன்றாக்கப்பட்டு வருகிற 26ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று அறிவித்தனர்.
இந்த வழக்கில் பிரதிவாதிகளாக மத்திய அரசு, தமிழகம் மற்றும் கேரள மாநில அரசுகள் சேர்க்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications