பறந்து கொண்டிருந்த கோவை-சிங்கப்பூர் விமானத்தை தரையிறக்கி ஹெராயின் பறிமுதல்
கோவையில் இருந்து நேற்று நள்ளிரவு சிங்கப்பூருக்கு செல்லும் சில்க் ஏர்வேஸ் விமானத்தில் கோடிக்கணக்கான மதிப்புள்ள போதை பொருள் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் உளவுத்துறை இயக்குனர் அலுவலகத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து வருவாய் உளவுத்துறை அதிகாரிகள் விமான நிலையத்துக்கு விரைந்தனர். ஆனால், அதற்குள் விமானம் புறப்பட்டுவிட்டது. இதைத் தொடர்ந்து விமானத்தை மீண்டும் கோவையில் தரையிறக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து விமானம் கோவையில் மீண்டும் தரையிறங்கியது.
இதைத் தொடர்ந்து அனைத்து பயணிகளும் கீழே இறக்கப்பட்டு அவர்களது உடமைகள் மீண்டும் சோதனையிடப்பட்டன.
இதில் கோவை வெரைட்டிஹால் மானிய தோட்டம் பகுதியை சேர்ந்த அகமது என்பவரின் மகன் இப்ராகிம் (24) என்பவரின் பேகேஜில் இருந்து 27 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் சர்வதேச சந்தை மதிப்பு ரூ. 27 கோடி.
இப்ராகிமை அதிகாரிகள் கைது செய்து அழைத்துச் சென்றதையடுத்து விமானம் மீண்டும் சிங்கப்பூர் கிளம்ப அனுமதிக்கப்பட்டது.
இப்ராகிம் மத்திய வருவாய் உளவுத்துறை இயக்குனர் அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பறந்து கொண்டிருந்த விமானத்தை தரையிறக்கி போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது கோவை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.