சேது-திட்டத்தை நிறைவேற்றாவிட்டால்-தா.பாண்டியன் எச்சரிக்கை
மதுரை: சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றாவிட்டால் எங்களின் எதிர்ப்பு கடுமையாக இருக்கும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.
மதுரையில் நடைபெற்ற அக்கட்சியின் பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது,
சேது சமுத்திரத் திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றாவிட்டால் தமிழகத்தை சேர்ந்த காங்கிரஸ் அமைச்சர்களை எதிர்த்து போராட்டம் நடத்துவோம். மத்திய அரசு அலுவலகங்களை முடக்கும் வகையில் போராட்டம் இருக்கும். நாங்கள் கூட்டணியில் இருப்பதா இல்லையா என்பதை காங்கிரசே தீர்மானிக்கட்டும். சேது சமுத்திரத் திட்டத்தை கைவிட்டவர்களுக்கு கை கொடுக்க நாங்கள் தயாராக இல்லை.
இந்தியா சுதந்திரம் அடைந்து 62 ஆண்டுகள் ஆன பிறகும் கோடீஸ்வரர்களின் பட்டியலை மட்டும் வெளியிடும் இந்த நாட்டின் நிலையை யாரால் மாற்ற முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
75 கோடி மக்களின் வாழ்க்கையில் எந்த மாற்றமும் இல்லை. 77 கோடி மக்களுக்கு 20 முதல் 25 ரூபாய்க்கு மேல் வருமானம் இல்லை என்று மத்திய அரசால் நியமிக்கப்பட்ட புள்ளியியல் நிபுணர் சென்குப்தா தெரிவித்துள்ளார்.
மத்திய, மாநில அரசுகள் சில வழிமுறைகளை மாற்ற வேண்டும் என்று விஞ்ஞானி சுவாமிநாதன் சொல்லி உள்ளார்.
புதுக்கோட்டையில் வரும் 29ம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு நடைபெறும். அடுத்ததாக மார்ச் 3ம் தேதி பேரணியும், பொதுக்கூட்டமும் நடத்தப்படுகிறது. போராட்டம் நடத்தி சிறைகளை நிரப்புவதைவிட வேறு வழியில்லை என்ற முடிவை இந்த மாநாட்டில் எடுக்க வேண்டி இருக்கிறது என்றார் தா.பாண்டியன் கவலையுடன்.