பெண்ணின் மரணத்திற்கு இழப்பீடு - வைர நெக்லஸ்!
துபாய்: சவூதியில் வீட்டு வேலை பார்த்து வந்த இலங்கையைச் சேர்ந்த 28 வயதுப் பெண்ணை சாப்பாடு கூட தராமல் பட்டினி போட்டதால் அவர் பரிதாபமாக இறந்து போனார். அந்த குற்றத்திலிருந்து தப்ப ரூ. 40 ஆயிரம் மதிப்புள்ள வைர நெக்லஸை, அந்தப் பெண்ணை வேலைக்கு அனுப்பிய ஏஜென்சிக்கு கொடுத்துள்ளனர் சவூதி தம்பதியினர்.
இலங்கையைச் சேர்ந்த பரிதாபத்துக்குரிய வசந்தி (28) என்கிற அந்தப் பெண் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சவூதி அரேபியாவுக்கு வீட்டு வேலை பார்க்க வந்தார். தனது சகோதரனின் இருதய அறுவைச் சிகிச்சைக்குத் தேவையான பணத்தை சம்பாதிப்பதற்காக கடல் கடந்து அந்தப் பெண் வந்தார்.
ஒரு சவூதி தம்பதியின் வீட்டில் அவர் வேலைக்கு விடப்பட்டார். நன்றாக வேலை வாங்கிய அந்த தம்பதியினர், வசந்திக்கு சரியான முறையில் சாப்பாடு கூட தராமல் கொடுமைப்படுத்தி வேலை வாங்கியுள்ளனர்.
இந்த நிலையில் 2005ம் ஆண்டு அக்டோபர் மாதம் வசந்தி பரிதாபமாக இறந்து போனார்.
இதையடுத்து அந்த சவூதி தம்பதியினர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
வசந்திக்கு சரியான முறையில் சாப்பாடு தராமல் கொடுமைப்படுத்தியதால்தான் அவர் உயிரிழந்தார். இந்தக் குற்றத்திலிருந்து தப்பிக்க வசந்தியை வேலைக்கு அனுப்பிய ஏஜென்சிக்கு ரூ. 40 ஆயிரம் மதிப்புள்ள வைர நெக்லஸ் மற்றும் ரூ. 40 ஆயிரம் ரொக்கப் பணம் ஆகியவற்றை கொடுத்து அந்த தம்பதியினர் சரிக்கட்டியது பின்னர் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
தற்போது வசந்திக்குரிய இழப்பீட்டுத் தொகையை பெற்று இலங்கை தூதரகம், இலங்கையில் உள்ள வசந்தியின் குடும்பத்துக்கு அனுப்பி வைக்கவுள்ளது.
இலங்கையில் உள்ள குக்கிராமமான கோனபோலாவில் வசிக்கும், வசந்தியின் வயதான தாயாருக்கு இந்தத் தொகை அனுப்பி வைக்கப்படும். வசந்திக்கு ரூ. 2.5 லட்சம் இழப்பீட்டுத் தொகை கிடைக்குமாம்.
அரிய உயிருக்கு அல்ப நகையை விலை பேசிய கொடுமை உலகம் இதுவரை கண்டிராத கொடூரம்!












Click it and Unblock the Notifications