பறவைக் காய்ச்சல் பீதி- ஷட்டில் இறக்குமதிக்கு தடை: முகாம் ரத்து
ஷட்டில் காக் எனப்படும் பேட்மின்டன் போட்டிக்குத் தேவையான இறகுப் பந்துகளை இறக்குமதி செய்வதில் மத்திய விளையாட்டு அமைச்சகம் தாமதம் செய்து வருகிறது. இதற்கு இந்திய பேட்மின்டன் சங்கம் கடும் அதிருப்தியும், கண்டனமும் தெரிவித்துள்ளது.
விரைவில் நடைபெறவுள்ள தாமஸ் மற்றும் உபெர் கோப்பை போட்டிகளுக்கான தேசிய பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெறுவதாக இருந்தது. ஆனால் ஷட்டில் காக் பற்றாக்குறை காரணமாக முகாமை தள்ளி வைக்க நேரிட்டது.
இந்திய வீரர்களில் அனூப் ஸ்ரீதர் உலக அளவில் 27வது ரேங்க்கில் உள்ளார். மகளிர் பிரிவில் சாய்னா நேஹ்வால் 29வது ரேங்க்கில் உள்ளார். இதுதவிர தேசிய அணிய வீரர், வீராங்கனைகளும் உள்ளனர். அத்தனை பேரும் பயிற்சி முகாமில் கலந்து கொள்ள முடியாமல் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர்.
இதுகுறித்து இந்திய பேட்மின்டன் சங்கத் தலைவர் வி.கே.வர்மா கூறுகையில், எங்களது சொந்த செலவில் இறகுப் பந்துகளை வாங்கிக் கொள்வதாக கூட தெரிவித்தோம். அந்தப் பணத்தை அவர்கள் (இந்திய விளையாட்டு ஆணையம்) பிறகு திருப்பிக் கொடுத்தால் போதும்.
ஆனால் அதற்கும் விளையாட்டு ஆணையம் ஒத்துக் கொள்ளவில்லை. இதுதொடர்பாக கடந்த 6 மாதமாகவே இழுபறி நிலவி வருகிறது என்றார் அவர்.
ஆனால் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகமோ பறவைக் காய்ச்சலை காரணம் காட்டுகிறது. இதுகுறித்து விளையாட்டுத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்தியாவில் பயன்படுத்தப்படும் ஷட்டில் காக்கள் அனைத்தும் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுபவை. அந்த ஷட்டில்கள் அனைத்தும் வாத்து இறகுகளிலிருந்து தயாரிக்கப்படுபவை.
இப்போது பறவைக் காய்ச்சல் இருப்பதால் இறக்குமதியில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. எனவேதான் சீனாவிலிருந்து ஷட்டில்களை இறக்குமதி செய்ய முடியாத நிலை நிலவுவதாக அவர் கூறினார்.
முன்னாள் ஷட்டில்காக் வீரர் உதய் பவார் கூறுகையில், சீன இறகுப் பந்துள்கள்தான் மிகவும் சிறந்தவை ஆகும். வேதியியல் ரீதியாக அவை முழுமையாக சுத்தப்படுத்தப்பட்டவை. எனவே அதன் மூலம் பறவைக் காய்ச்சல் பரவுமோ என அஞ்சுவது தேவையற்றது. இதை விளையாட்டுத் துறைக்கு இந்திய பேட்மின்டன் சங்கம் விளக்கியிருக்க வேண்டும் என்றார் அவர்.
இந்திய வீரர்களுக்கு ஒரு நாளைக்கு 15 முதல் 20 ஷட்டில் காக்கள் தேவைப்படும். ஆனால் சுத்தமாக ஷட்டில் காக் இறக்குமதி செய்யப்படாத காரணத்தால் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது பேட்மின்டன்.
சரி, இந்தியாவில் தயாரிக்கப்படும் இறகுப் பந்துகளை பயன்படுத்தலாம் என்றால், அவை மகா மோசமான குவாலிட்டியில் இருப்பதால் பயன்படுத்த முடியாதாம்.