அமெரிக்காவில் இன்னொரு இந்திய மாணவர் மர்மச் சாவு
பெங்களூரைச் சேர்ந்த சுப்பிரமணியம், சாராவதி தம்பதியின் மகன் மகேஷ் (20) அமெரிக்காவின் வடக்கு கென்டக்கி பல்கலைக்கழகத்தில் பிஎஸ்சி படித்து வந்தார். இறுதி செமஸ்டரில் இருந்த அவர் கேம்ப்பெல் கவுண்டியில் உள்ள ஹிட்டன்வேலி அபார்ட்மெண்ட் குடியிருப்பில் வசித்து வந்தார்.
இவருடன் அதே பல்கலைக்கழகத்தில் எம்.இ. பயிலும் சன்னி என்ற அமெரிக்க மாணவரும் தங்கியிருந்தார்.
இந் நிலையில் 3 வாரங்களுக்கு முன் இவர் தனது குடியிருப்பில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். ஆனால், அதை சில நாட்கள் கழித்தே அவரது பெற்றோருக்கு பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மகேஷ் உடலை பிரதேசப் பரிசோதனை நடத்திய டாக்டர்கள், மரணத்திற்கான காரணம் தெரியவில்லை என ரிப்போர்ட் தந்துள்ளனர்.
இந் நிலையில் இறந்து 18 நாட்களாக நிலையில் நேற்று மகேஷின் உடல் பெங்களூர் வந்து சேர்ந்தது. நேற்றே இறுதிச் சடங்குகளும் செய்யப்பட்டுவிட்டன.
முதலில் மகேஷ் பல்கலைக்கழகத்தில் இறந்ததாக பெற்றோருக்கு தகவல் தரப்பட்டது. பின்னர் குடியிருப்பில் இறந்ததாக பெற்றோருக்கு தகவல் வந்தது. மேலும் பெற்றோரின் பல கேள்விகளுக்கும் பல்கலைக்கழகத்திடம் இருந்து மிகவும் குழப்படியான பதில்கள் தரப்பட்டுள்ளன.
இதனால் இந்த மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், மகேஷ் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் அவரது தாயார் சாராவதி சந்தேகம் தெரிவித்துள்ளார்.