முஸ்லீம்கள் ஆதரவை இழக்கிறது அல்-கொய்தா: அமெரிக்கா
வாஷிங்டன்:முஸ்லீம்களுக்கு எதிராகவே அல் கொய்தா வன்முறையில் ஈடுபட்டு வருவதால், உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்களின் ஆதரவையும், அனுதாபத்தையும் வேகமாக இழந்து வருவதாக அமெரிக்க உளவு அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க உளவுப் பிரிவு இயக்குநர் மைக் மெக்கன்னல், உளவுப் பிரிவுக்கான நாடாளுமன்றக் கமிட்டியிடம் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், இஸ்லாமிய உலகினர் மத்தியில் அல் கொய்தா ஆதரவை இழந்து வருகிறது. இது எந்த அளவுக்கு உள்ளது என்பதைக் கூற முடியவில்லை. ஆனால் தீவிரமாக கண்காணித்து வருகிறோம்.
முஸ்லீம் மக்கள் மீது அல் கொய்தாவினர் மேற்கொள்றும் கொலை வெறித் தாக்குதல்கள், வன்முறைகள், இஸ்லாமியர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அல் கொய்தா மட்டுமல்லாது அதனுடன் தொடர்புடைய தீவிரவாத அமைப்புகள் மீதும் இஸ்லாமியர்கள் அதிருப்தி கொள்ள ஆரம்பித்துள்ளனர்.
முஸ்லீம்களின் காப்பாளர் என நினைத்து வந்த சில முஸ்லீம்கள் கூட இப்போது அல் கொய்தாவினை தீவிரவாத இயக்கமாக பார்க்க ஆரம்பித்துள்ளனர்.
கடந்த 18 மாதங்களில் அல் கொய்தா அமைப்புக்கு பெரும் நிதி நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. முன்பு போல அவர்களுக்கு தாராளமாக நிதியுதவி கிடைப்பதில்லை.
அல் கொய்தாவின் நோக்கம்தான் என்ன என்று பல முஸ்லீம் நாடுகள் கேட்க ஆரம்பித்துள்ளன.
அல் கொய்தா அமைப்புக்குள்ளும் கூட முன்பு போல தீவிரமான எண்ணம் கொண்டவர்கள் இப்போது இல்லை. பல தலைவர்கள் உள்பட பெருமளவிலா அல் கொய்தாவினர் தங்களது போர்க்குணத்திலிருந்து படிப்படியாக இறங்கி வந்து கொண்டுள்ளனர்.
அல் கொய்தா அமைப்பினர் சந்தித்து வரும் நெருக்கடிகள் ஒருபக்கம் இருந்தாலும், அமெரிக்காவுக்கு இன்னும் அது மிரட்டலாகவே இருந்து வருகிறது.
பல்வேறு சரிவுகள், சோர்வுகள் ஏற்பட்டாலும் கூட அல் கொய்தா அமைப்பின் வீரியம் இன்னும் குறையவில்லை. குறிப்பாக, ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் அல் கொய்தா இன்னும் தீவிரமாகவே உள்ளது என்றார் அவர்.