அமீத்குமாரை கொண்டு வர தாமதமாகும்!

டெல்லி அருகே குர்கானில் 500க்கும் மேற்பட்ட அப்பாவிகளிடம் அடி மாட்டு விலைக்கு சிறுநீரகங்களை எடுத்து ெவளிநாட்டினருக்கு பெரும் விலைக்கு விற்று மோசடி செய்த டாக்டர் அமீத் குமார் சில வார தலைமறைவுக்குப் பின்னர் நேற்று நேபாளத்தில் பிடிபட்டார்.
அவரை இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளில் சிபிஐ இறங்கியுள்ளது. ஆனால் அவரைக் கொண்டு வருவது கால தாமதமாகும் எனத் தெரிகிறது.
அமீத்குமார் கைது செய்யப்பட்டபோது அவரிடமிருந்து பல்வேறு நாட்டுப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றுக்கு முறையான கணக்கு இல்லை. எனவே சட்டவிரோதமாக, அளவுக்கு அதிகமாக பணம் வைத்திருந்ததாக அமீத்குமார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, நேபாள நாட்டு சட்டத்திற்குப் புறம்பாக மனித உறுப்பு மாற்றம், இன்டர்போல் நோட்டீஸின் கீழ் என மேலும் இரு வழக்குகளையும் நேபாள போலீஸார் தொடரவுள்ளனர்.
நாளை அமீத்குமாரை காத்மாண்டு நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்துகின்றனர். அதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்படுவார். இதன் பின்னர் நேபாள போலீஸார் தொடர்ந்துள்ள வழக்குகளில் அவர் விசாரிக்கப்படுவார். அதில் அவருக்கு தண்டனை அளிக்கப்பட்டால், அந்த தண்டனை முடிந்த பிறகுதான் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவார் எனத் தெரிகிறது.
மேற்கண்ட மூன்று வழக்குகளிலும் அமீத்குமாருக்கு மொத்தமாக 9 ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்கும் எனத் தெரிகிறது.
எனவே அமீத்குமாரை இந்தியாவுக்குக் கொண்டு வருவது தாமதமாகும் எனத் தெரிகிறது.
இதுகுறித்து உள்துறை இணை அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் கூறுகையில், பிற நாடுகளை விட நேபாளத்திலிருந்து நாடு கடத்துவது என்பது எளிதான விஷயம்தான். எனவே அமீத்குமாரை விரைவில் இந்தியாவுக்குக் கொண்டு வர முடியும் என நம்புகிறோம். அதற்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன என்றார் ஜெய்ஸ்வால்.












Click it and Unblock the Notifications