For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முன்னாள் அமைச்சர் க.ராசாராம் மரணம்

By Staff
Google Oneindia Tamil News

Rasaram
சென்னை: தமிழக முன்னாள் சபாநாயகரும், முன்னாள் அமைச்சருமான ராசாராம் சென்னையில் நேற்று மரணமடைந்தார்.

84 வயதான ராசாராம் ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள சீதம்மாள் காலனியில் வசித்து வந்தார். தீவிர அரசியலில் ஈடுபடாமல் ஓய்வெடுத்து வந்த அவருக்கு சர்க்கரை வியாதி இருந்தது.

2 வருடத்திற்கு முன்பு இருதய அறுவைச் சிகிச்சையும் செய்து கொண்டார். இந்த நிலையில் கடந்த ஒரு வருடமாக அவரது உடல் நலம் சரியில்லை. சமீபத்தில் அவரது உடல் நிலை மோசமடைந்தது. இதையடுத்து அப்பல்லோ மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று மாலை ராசாராம் மரணமடைந்தார்.

அவருக்கு ஒரு மகன், மருமகள் உள்ளனர். மனைவி சாந்தகுமாரி ஏற்கனவே மரணமடைந்து விட்டார்.

மறைந்த ராசாராம் சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்தவர். தர்மபுரியில் பள்ளிப் படிப்பை முடித்த அவர், சேலம் அரசினர் கல்லூரியில் பட்டப் படிப்பை முடித்தார். 1952ல் திராவிடர் கழகத்தில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கினார். 1962ல் கிருஷ்ணகிரி எம்.பி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு, ராஜாஜியின் மகன் நரசிம்மனைத் தோற்கடித்தார்.

1967ல் சேலம் எம்.பி. தொகுதியில் போட்டியிட்டு வென்றார். 1971ல் முதல்வராக கருணாநிதி இருந்தபோது அவரது அமைச்சரவையில் இடம் பெற்றார்.

பின்னர் திமுகவிலிருந்து எம்.ஜி.ஆர். வெளியேற்றப்பட்ட பின்னர் அதிமுகவை தொடங்கியபோது, அதில் ராசாராமும் இணைந்தார். எம்.ஜி.ஆர். பின்னர் ஆட்சி அமைத்தபோது முதலில் அமைச்சராக இருந்தார். பின்னர் சபாநாயகர் பதவியை அலங்கரித்தார்.

எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின்னர் ஜெயலலிதாவின் தலைமையிலான அதிமுகவில் செயல்பட்டார். ஜெயலலிதாவின் முதல் அமைச்சரவையில் அமைச்சராக சிறிது காலம் இருந்தார்.

ராசாராமின் மறைவுச் செய்தியை அறிந்ததும் முதல்வர் கருணாநிதி அவரது வீட்டுக்கு சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, பொன்முடி, திண்டுக்கல் பெரியசாமி உள்ளிட்டோரும் உடன் சென்றனர்.

ராசாராம் மறைவுக்கு ஆளுநர் பர்னாலா, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், திராவிட இயக்க மூத்த முன்னோடிகளில் ஒருவரும், பெரியாரின் அணுக்கத் தொண்டர்களில் ஒருவராக விளங்கியவரும், 1971 முதல் 1976 வரை எனது அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தவரும், பின்னர் சட்டப் பேரவைத் தலைவராக பணியாற்றியவருமான அருமை நண்பர் சு.ராசாராம் மறைவடைந்த செய்தியினை கேட்டறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.

சேலம் மாவட்டத்தில் தொடக்கக் காலத்தில் கழகத்தை வளர்க்க அரும்பாடு பட்டார். அண்ணா சிகிச்சைக்காக வெளிநாடு சென்றபோது இவரும் உடன் சென்றார்.

இவரது மறைவு இவ்வளவு சீக்கிரம் வரும் என்று நான் எண்ணவில்லை. இவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X