சென்னையில் ரூ. 20 லட்சம் நகையுடன் வேலைக்காரி ஓட்டம்
சென்னை: சென்னையில் ரூ. 20 லட்சம் வைர நகைகளுடன் வேலைக்காரப் பெண் தலைமறைவாகி விட்டார். அவரைப் பிடிக்க போலீஸார் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர்.
எழும்பூர் ஹால்ஸ் சாலையில் வசித்து வருபவர் ரமேஷ் பஜாஜ். இவரது மனைவி ராஜி பஜாஜ். இவரது வீட்டில் கடந்த 5ம் தேதி செல்வி என்பவர் ஒரு பெண்ணை வீட்டு வேலைக்காக அழைத்து வந்தார். அப்போது ரமேஷ் பஜாஜ் வெளியூர் போயிருந்தார்.
அழைத்து வரப்பட்ட பெண்ணின் பெயரை ராஜி பஜாஜ் கேட்டு தெரிந்து கொள்ளவில்லை. செல்விக்கு தெரிந்த பெண் என்பதால் வேலைக்கு வந்த பெண்ணை ராஜி சேர்த்துக் கொண்டார். வீட்டில் வேலைக்கு சேர்ந்த அந்தப் பெண் 2 மணி நேரம் வேலை பார்த்தார். பின்னர் திடீரென யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் வீட்டை விட்டுப் போய் விட்டார்.
அப்போதும் சுதாரிக்காத ராஜி பஜாஜ், அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. வீட்டில் ஏதேனும் காணாமல் போயுள்ளதா என்று கூட சோதிக்கவில்லை.
இந்த நிலையில், 7ம் தேதி ரமேஷ் பஜாஜ் வீடு திரும்பினார். அப்போது புதிதாக வேலைக்கு ஒரு பெண் சேர்ந்ததையும், சில மணி நேரங்களில் அவர் போய் விட்டதையும் ராஜி தெரிவித்துள்ளார்.
இதைக் கேட்டு குழப்பமடைந்த ரமேஷ் உடனடியாக வீட்டில் இருந்த நகைகள், பணத்தை சோதித்தார். அப்போதுதான் பீரோவில் வைத்திருந்த ரூ. 20 லட்சம் மதிப்புள்ள வைர நகைகள் காணாமல் போயிருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து உடனடியாக எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் ரமேஷ் பஜாஜ். போலீஸார் உடனடியாக செல்வியை அழைத்து விசாரித்து வருகின்றனர்.
வீட்டு வேலைக்கு ஆட்களை சேர்க்கும்போது விசாரிக்காமல் சேர்த்தால் இப்படித்தான் நடக்கும் என்று போலீஸார் எச்சரித்துள்ளனர். இனிமேலாவது வீட்டு வேலைக்கு பெண்களை சேர்க்கும்போது பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications