அரசு மருத்துவமனைகளில் லஞ்சம்..அமைச்சர் எம்.ஆர்.கே எச்சரிக்கை
சென்னை: அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் ஊழியர்கள் லஞ்சம் வாங்கினால் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என சுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை உள்பட மாநிலத்தில் உள்ள பல அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளிடம் லஞ்சம் கேட்டு ஊழியர்கள் நச்சரித்து வருவது புதிய செய்தியல்ல.
இந் நிலையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியதாவது,
அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வரும் நோயாளிகளிடம் ஊழியர்கள் லஞ்சம் கேட்பது தண்டனைக்குரிய குற்றம். ஸ்டான்லி மருத்துவமனையில் ஊழியர்கள் லஞ்சம் கேட்டதாக புகார் எழுந்துள்ளது. இந்தக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள்.
இனிமேல் அரசு மருத்துவமனைகளில் யாராவது லஞ்சம் கேட்டால் நோயாளிகள் தைரியமாக புகார் செய்யலாம். தவறு செய்யும் ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என்றார் அமைச்சர்.
இதுகுறித்து ஸ்டான்லி மருத்துக் கல்லூரி முதல்வர் டாக்டர் மைதிலி பாஸ்கரன் கூறியதாவது,
நோயாளிகள் யாரும் ஊழியர்கள் லஞ்சம் கேட்டதாக புகார் தரவில்லை. இருந்தாலும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். லஞ்சம் வாங்கியது நிரூபிக்கப்பட்டால் ஊழியர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள் என்றார்.