சிபிஐ காவலில் அமீத் குமார் - டெல்லி கோர்ட் உத்தரவு
டெல்லி: நேபாளத்தில் கைது செய்யப்பட்ட சிறுநீரக மோசடி மன்னன் டாக்டர் அமீத் குமார் நேற்று இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை வருகிற 22ம் தேதி வரை தங்களது காவலில் வைத்து விசாரிக்க சிபிஐக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது.
டெல்லி குர்கான் அருகே 500க்கும் மேற்பட்டோரிடம் சிறுநீரகங்களை குறைந்த விலைக்குப் பெற்று லட்சக்கணக்கில், வெளிநாட்டினருக்கு விற்று மோசடி செய்ததாக தேடப்பட்டு வந்த டாக்டர் அமீத்குமார் வியாழக்கிழமை நேபாளத்தில் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து அவரை இந்தியாவுக்குக் கொண்டு வரும் முயற்சிகளில் சிபிஐ இறங்கியது. இருப்பினும் நேபாளத்திலிருந்து இந்தியாவுக்கு அமீத் குமாரை கொண்டு வர கால தாமதமாகும் என கூறப்பட்டது.
இதையடுத்து நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் உள்ள இந்தியத் தூதரகம் மூலம் நேபாள அரசை சிபிஐ தொடர்பு கொண்டு அமீத்குமாரை இந்தியாவிடம் ஒப்படைக்க முறைப்படி கோரிக்கை விடுத்தது. மேலும், இந்திய வெளியுறவு அமைச்சகமும், நேபாள அரசைத் தொடர்பு கொண்டு விரைவில் அமீத்குமாரை ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தது.
இந்த முயற்சிகளின் விளைவாக நேற்று மாலை சிபிஐ அதிகாரிகளிடம் அமீத்குமார் ஒப்படைக்கப்பட்டார். இதையடுத்து தனி விமானம் மூலம் உடனடியாக அவரை டெல்லிக்கு அதிகாரிகள் கொண்டு வந்தனர்.
இரவு 7 மணியளவில் அமீத் குமார் டெல்லி கொண்டு வரப்பட்டார். டெல்லி கொண்டு வரப்பட்டதும் உடனடியாக சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு அவரை அதிகாரிகள் அழைத்துச் சென்றனர்.
சிபிஐ தலைமை அலுவலகத்தில் அமீத்குமாரிடம் சிபிஐ அதிகாரிகள் துருவித் துருவி விசாரணை நடத்தினர்.
பின்னர் பலத்த பாதுகாப்புடன் அவரை டெல்லி தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் சஞ்சீவ் ஜெயின் வீட்டில் ஆஜர்படுத்தினர்.
அவரை தங்களது காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என சிபிஐ வழக்கறிஞர் நீதிபதியிடம் கோரிக்கை விடுத்து மனு தாக்கல் செய்தார்.
இதை ஏற்ற நீதிபதி ஜெயின், வருகிற 22ம் தேதி வரை சிபிஐ காவலில் வைத்து அமீத்குமாரை விசாரிக்க அனுமதி அளித்தார்.
அமீத் குமார் மீது பயங்கர ஆயுதங்களால் வேண்டும் என்றே காயம் ஏற்படுத்துவது (ஐபிசி 326), தவறான செயல் (ஐபிசி 342), மோசடி (ஐபிசி 420), கிரிமினல் சதி (ஐபிசி 120பி) ஆகிய பிரிவுகளின் கீழ் சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
இதுதவிர 1994ம் ஆண்டைய மனித உறுப்பு மாற்ற சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.