சாலை விபத்தில் மணப்பெண் உள்பட 8 பேர் பலி
தேனி: தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே நடந்த பயங்கர சாலை விபத்தில் இன்று திருமணம் நடக்கவிருந்த மணப்பெண் உள்பட 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மதுரை ஜெய்ஹிந்துபுரத்தைச் சேர்ந்த பரமசிவன் என்பவரின் மகன் சண்முகநாதனுக்கும், தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்த குணசேகரன் மகள் ஹேமலதாவுக்கும் இன்று மதுரையில் திருமணம் நடக்க நிச்சயிக்கப்பட்டிருந்தது. சண்முகநாதனின் சொந்த அத்தை மகள்தான் ஹேமலதா.
நேற்று மணப்பெண் அழைப்பு நடந்தது. கம்பத்தில் உள்ள ஹேமலதாவின் வீட்டில் இந்த நிகழ்ச்சி நடந்தது. பின்னர் டாடாசுமோ காரில் ஹேமலதா உள்ளிட்ட மணப்பெண் வீட்டைச் சேர்ந்த 15 பேர் மதுரைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
காரில் ஹேமலதாவின் தாத்தா ரங்கசாமி, தாயார் நாகலட்சுமி, அண்ணன் சுரேஷ், அத்தை கீதா, சித்தப்பா இளங்கோவன் மற்றம் உறவினர்கள் ரேவதி, யுவராணி, முருகன், ஜெகதா (18), மதுமிதா (8), நவீன் (7), தர்வேஸ் (5), சஞ்சு (4) ஆகியோர் காரில் இருந்தனர்.
ஆண்டிப்பட்டி அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி அருகே கார் வந்தபோது எதிர் திசையில் வேகமாக வந்த லாரி கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் மணப்பெண் ஹேமலதா, ரங்கசாமி, கீதா, தர்வேஸ், சஞ்சு ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
மற்றவர்கள் காருக்குள் சிக்கி படுகாயமடைந்து வலியால் அலறித் துடித்தனர். இதையடுத்து அந்த சாலை வழியாக சென்றவர்கள் விரைந்து வந்து காருக்குள் சிக்கித் தவித்தவர்களை மீட்டனர். போலீஸார் விரைந்து வந்து இறந்தவர்களின் உடல்களை மிகுந்த போராட்டத்தற்குப் பின்னர் மீட்டனர்.
காயமடைந்தவர்கள் தேனி அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு இளங்கோவன், சுரேஷ், சுஜிதா ஆகியோர் உயிரிழந்தனர்.
ஹேமலதாவின் தந்தை குணசேகரன் விபத்து நடந்த நேரத்தில் மதுரைக்கு பேருந்தில் போய்க் கொண்டிருந்தார். அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் உடனடியாக அவர் தேனி விரைந்து வந்தார். மணப்பெண் வீட்டாரும் விரைந்து வந்தனர்.
ஹேமலதா உள்ளிட்டோர் கோரமாக இறந்து கிடந்ததைப் பார்த்து அனைவரும் கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது. மருத்துவமனை முழுவதும் சோகமயமாக காணப்பட்டது.