Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மதுரையைக் கலக்கிய சரத் கட்சி மாநாடு

Subscribe to Oneindia Tamil

பல அரசியல் திருப்பங்களுக்கு வித்திட்ட மதுரையில் இன்று சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் முதலாவது மாநில மாநாடு நடந்தது.

கடந்த ஆண்டு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை தொடங்கிய சரத்குமார், தனது கட்சியின் முதலாவது மாநில மாநாட்டை இன்று மதுரையில் நடத்துகிறார். இதற்காக மதுரை விரகனூர், சுற்றுச் சாலையில் பிரமாண்ட பந்தல் போடப்பட்டிருந்தது.

இன்று காலை 11.20 மணிக்கு மாநாடு தொடங்கியது. சரத்குமார் கட்சிக் கொடியை ஏற்றி வைத்து மாநாட்டைத் தொடங்கினார். பின்னர் சரத்குமாரின் மனைவி ராதிகா சரத்குமார் குத்து விளக்கேற்றினார்.

அதையடுத்து தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சிகள் தொடங்கின. முதலில் கட்சி நிர்வாகிகள் உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது.

அதையடுத்து கவிஞர் சோலையார் தலைமையில் கவியரங்கம் தொடங்கியது. பின்னர் ராமு - ராணி கரகாட்டம் மற்றும் தமிழர் பாரம்பரியக் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மாலையில் இசையமைப்பாளர்கள் தேவா - ஸ்ரீகாந்த் தேவா குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.

மாலை ஐந்தரை மணியளவில் அரசியல் அரங்கம் தொடங்கியது. இதற்கு சரத்குமார் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் எர்ணாவூர் நாராயணன், கொள்கை பரப்புச் செயலாளர் மருது. அழகுராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநாட்டையொட்டி நகர் முழுவதிலும் சரத்குமார் கட்சிக் கொடிகள், தோரணங்கள் களை கட்டியிருந்தன. கார்கள் வேன்கள், பஸ்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ரசிகர்களும், தொண்டர்களும் மதுரைக்கு வந்திருந்தனர்.

மாநாட்டு மேடையில், சரத்குமாரின் வயதை குறிக்கும் வகையில் 53 புறாக்களை தொண்டர்கள் பறக்க விட்டனர். மேலும் கட்சியின் வர்ணத்தை குறிக்கும் வகையில் சிவப்பு மற்றும் மஞ்சள் வண்ண பலூன்களும் பறக்க விடப்பட்டன.

அகில இந்திய யாதவ மகாசபை தலைவர் கோபாலகிருஷ்ணன், இந்திய சமூக நீதி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தனசீலன், மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் ஷரீப், சரத்குமாரின் மூத்த மகள் வரலட்சுமி சரத்குமார் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

மாநாட்டையொட்டி மதுரை மற்றும் சுற்றுப் பகுதிகளிலும் தெப்பக்குளம், விரகனூர், பாண்டி கோயில், சிவகாசி ராமநாதபுரம் சாலை சந்திப்பில் கட்சி கொடிகள், தோரணங்கள் ஏராளமான கட்டப்பட்டிருந்தன.

மாநாடு நடைபெறும் விரகனூர் ரிங் சாலை சந்திப்பின் இருபுறமும் டிஜிட்டல் பேனர்களால் நிரம்பி இருந்தது. மின் கம்பங்களிலிருந்து கொக்கி போட்டு மின்சாரத்தை எடுக்காமல் மாநாடு முழுவதற்கும் தேவைப்படும் அளவிற்கு தனித்தனியாக ஏராளமான மின் ஜெனரேட்டர்கள் கொண்டு வரப்பட்டு அதிலிருந்து மின்சார உற்பத்தி செய்யப்பட்டு பயன் படுத்தப்பட்டது.

பாதுகாப்புக்கு போலீஸார் குறைவான அளவிலேயே நிறுத்தப்பட்டிருந்தனர். இருப்பினும் எஸ்.எஸ்.எப் என்ற தனியார் செக்யூரிட்டி அமைப்பை சரத்குமார் மாநாட்டு பாதுகாப்பு பணிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தார். சுமார் 400க்கும் மேற்பட்ட இந்த எஸ்எஸ்எப் செக்யூரிட்டிகள் மாநாட்டு முகப்பில் தொடங்கி அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அவசர காலம் கருதி ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று அனைத்து மருத்துவ உபகரணங்களுடன் தயார் நிலையில் மேடைக்கு பின்புறம் நிறுத்தப் பட்டிருந்தது.

திருவிழா போல....

மாநாடு வளாகத்தில் ஏராளமான சிறு சிறு கடைகள் போடப்பட்டிருந்தன. திருவிழாவில் காணப்படுவது போல, ஓட்டல், டீக்கடை, கரும்புச்சாறு, பழச்சாறு, பொம்மைகள் போன்ற கடைகள் காணப்பட்டன.

முளைப்பாரி ஊர்வலம்:

முன்னதாக 2000 பெண்கள் வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்திலிருந்து முளைப்பாரிகளுடன் ஊர்வலமாக மாநாட்டுப் பந்தலுக்கு வந்தனர்.

மாநாட்டுப் பந்தலில் பெரிய அளவில் கூட்டம் காணப்படுகிறது. பெரும்பாலும் பெண்கள்தான் அதிகம் பேர் இருந்தனர். வெளியூர்க்காரர்கள்தான் அதிகம் காணப்பட்டனர்.

தாக்கத்தை ஏற்படுத்துவாரா சரத்?

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியைத் தொடங்கிய பின்னர் முதல் மாநில மாநாட்டை இன்று மதுரையில் நடத்தியுள்ளார் சரத்குமார். இதற்காக

தமிழ் சினிமாவில் வெற்றிகரமான தயாரிப்பாளராக, விநியோகஸ்தராக, நடிகராக முத்திரை பதித்துள்ள சரத்குமார் தற்போது நடிகர் சங்கத் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார்.

ஏற்கனவே நடிகர் சங்கத் தலைவராக செயல்பட்டு பின்னர் அரசியல் களம் கண்டு வெற்றிகரமான அரசியல்வாதியாக மாறி வருபவர் விஜயகாந்த். அவரது வழியில் சரத்குமாரும் வெற்றிகரமான அரசியல்வாதியாக மாறுவாரா, அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவாரா, திருப்புமுனையை தருவாரா என்ற எதிர்பார்ப்பு திரையுலகில் மட்டுமல்லாது தமிழக மக்கள் மனதிலும் எழுந்துள்ளது.

2 முறை எம்.பி பதவி வகித்துள்ள சரத்குமார், திமுக, அதிமுக என இரு பெரும் கட்சிகளில் சில காலம் இருந்தவர். அந்த அனுபவத்தை வைத்து தனிக் கட்சி தொடங்கிய அவர் முதன் முதலில் நடத்தும் மதுரை மாநாடு தமிழக அளவில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

நாடார் சமுதாய வாக்குகளை முதன்மையான குறிக்கோளாக கொண்டு தொடங்கப்பட்ட கட்சி என்ற முத்திரை சரத் கட்சிக்கு உள்ளது. இருப்பினும் பிற சாதியினருக்கு தான் விரோதியல்ல என்று சரத்குமார் ஆணித்தரமாக வலியுறுத்தியுள்ளார். தனது கட்சியின் ஆதர்சத் தலைவர்களாக காமராஜரை மட்டும் கொள்ளாமல் தென்னகத்தின் தனிப்பெரும் தலைவர்களில் ஒருவரான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரையும் சேர்த்துக் கொண்டுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் தந்தை பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். ஆகியோரையும் தனது தலைவர்களாக வரித்துக் கொண்டுள்ளார் சரத்குமார். இதன் மூலம் நாடார் சமுதாயத்தினர் மட்டுமல்லாமல் அனைத்துப் பிரிவினரையும் தன் பக்கம் ஈர்க்க அவர் நினைப்பது தெரிகிறது.

திரையுலகில் சாதித்து, அரசியலிலும் முத்திரை பதித்தவர்கள் தமிழகத்தில் வெகு சிலர்தான். எம்.ஜி.ஆர். திரையுலகில் முடி சூடா மன்னராக விளங்கியவர். பின்னர் அரசியலிலும் ஆட்டிப்படைத்தவர். அதேபோல திரையுலகில் பல்வேறு துறைகளில் முத்திரை பதித்த கருணாநிதி, இன்று வரை அரசியலில் சானக்கியராக வெற்றி நடை போட்டு வருகிறார்.

அதேசமயம், சிவாஜி கணேசன், டி.ராஜேந்தர், கே.பாக்யராஜ் என அரசியலில் அதிர்ஷ்டம் இல்லாமல் போனவர்கள் நிறையப் பேர் உள்ளனர்.

இந்த வரிசையில் விஜயகாந்த் தனக்கென தனி பாணியில் நடை போட்டு வருவதால் வெற்றிகரமான அரசியல்வாதிகள் பட்டியலில் மெல்ல மெல்ல சேர்ந்து வருகிறார். சினிமாவில் அவருக்கு மார்க்கெட் இல்லை என்ற நிலையில், முழு நேர அரசியல்வாதியாக மாறி வருகிறார்.

இந்த நிலையில் சரத்குமாரின் அடுத்த கட்ட முன்னேற்றம் எப்படி இருக்கும். விஜயகாந்த்தைப் போல அவரும் தாக்கத்தை ஏற்படுத்துவாரா என்பதை மதுரை மாநாடு வெளிக்காட்டும் என்ற எதிர்பார்ப்பில் அவரது கட்சியினர் உள்ளனர்.

முதல் மாநில மாநாடு குறித்து சரத்குமாரிடம் நாம் கேட்டபோது, நான் முழு நேர மக்கள் சேவகனாக இருக்க விரும்புகிறேன். அதிலேயே எல்லாம் அடங்கியிருக்கிறது.

சினிமாவுக்கான கதவுகளை மூட நான் விரும்பவில்லை. அது எனது கொள்கைகளை மக்களிடையே கொண்டு செல்ல உதவும் நல்ல உபகரணம் ஆகும்.

என்னைப் புகழ் வட்டத்தில் வைத்துக் கொள்வதற்காக நான் கட்சி தொடங்கவில்லை. மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்பது எனது கொள்கையாகும். அதற்கு அரசியல் அதிகாரம் வேண்டும். அதுதான் நான் கட்சி தொடங்க முக்கிய காரணம்.

மேலும் தமிழகத்தில் தற்போது உள்ள அரசியல் சூழ்நிலை, செயல்பாடுகள் மாற வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு நலத் திட்டங்கள் முறையாக போய்ச் சேரும் என்றார் சரத்குமார்.

அரசியலில் தோல்வி அடைந்த நடிகர்கள் குறித்து சரத் கவலைப்படவில்லை. மாறாக வெற்றிக் கொடி நாட்டிய எம்.ஜி.ஆரையே தனது முன்னோடியாக அவர் எடுத்துக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், திரையுலகினர் சிலர் அரசியலில் சந்தித்த தோல்விகளை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. எப்போதுமே எம்.ஜி.ஆரைத்தான் நான் முன்னோடியாக எடுத்துக் கொண்டுள்ளேன். பாடமாக எடுத்துக் கொண்டுள்ளேன். அவரது அடிச்சுவட்டில்தான் இப்போது நடந்து கொண்டிருக்கிறேன்.

திரைத் துறையிலும், அரசியலிலும் நான் வெற்றி பெறுவேன். மக்கள் என்னைப் பார்த்துக் கொள்வார்கள் என்றார் நம்பிக்கையுடன்.

சரத்குமாருக்கு பக்க துணையாக, அவரது மனைவி ராதிகா சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். ஒரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் பெண் இருப்பார் என்பதை நிரூபிக்கும் விதமாக ராதிகா, சரத்தின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பக்க பலமாக துணை நிற்கிறார். அந்த தெம்பில் சரத்குமாரும் படு தெம்பாக மதுரையிலிருந்து தீவிர அரசியலில் அடியெடுத்து வைக்கிறார்.

திமுக மற்றும் அதிமுகவினர் கைகளுக்கு மாறி மாறி போய் வரும் கோட்டையாக மதுரை உள்ளது. தற்போது திமுகவின் கோட்டையாக திகழும் மதுரையில், விஜயகாந்த்துக்கும் கொஞ்சம் கொஞ்சமாக சாதகமாகி வருகிறது. மதுரை மாநகராட்சித் தேர்தலில் விஜயகாந்த் பெற்ற வாக்குகளும், சீட்களும், அதிமுகவுக்கு பெரும் மிரட்டலாக இருந்தது அனைவரும் அறிந்ததே.

அந்த மதுரையில் இன்று தனது முதல் மாநில மாநாட்டை நடத்தியுள்ளார் சரத். மதுரை மற்றவர்களுக்குத் திருப்பத்தைக் கொடுத்தது போல தனக்கும் திருப்பம் தரும் என்ற அவரது அசைக்க முடியாத நம்பிக்கையையே இது காட்டுகிறது.

அதேசமயம், நாடார் சமுதாயத்தினரின் கோட்டையாக திகழும் நெல்லையிலோ அல்லது விருதுநகரிலோ மாநாட்டை நடத்தாமல், மதுரையில் நடத்த தீர்மானித்ததன் மூலம் தான் நாடார் சமுதாயத்தினருக்கு மட்டும் உரியவன் அல்ல, அனைத்து சமுதாயத்தினரின் அரவணைக்கும் தலைவன் என்றும் காட்டிக் கொண்டுள்ளார் சரத்குமார்.

சரத்குமாருக்கு மதுரை மாநாடு எந்த வகையான அந்தஸ்தைத் தரப் போகிறது என்பதை, தமிழக அரசியலில் அவர் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+