லிபியாவில் தவிக்கும் 26 தமிழர்களை மீட்க நடவடிக்கை: காங். எம்.பி
காரைக்குடி: லிபியாவில் தவிக்கும் 26 தமிழர்களை மீட்க மத்திய வெளியுறவுத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது என காங்கிரஸ் எம்.பி சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்துள்ளார்.
காரைக்குடியில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், வேலை பார்ப்பதற்காக லிபியா சென்ற மதுரை மற்றும் மேலூரைச் சேர்ந்த 26 பேர் அங்கு தவித்து வருகிறார்கள். அவர்களை இந்தியாவுக்கு அழைத்து வர தேவையான அனைத்து நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
இவர்கள் அனைவரையும் கணேசன் என்ற ஏஜென்ட் மாதத்திற்கு ரூ.16 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை சம்பளம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியுள்ளார்.
அவர் மீது பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அனைவரும் புகார் கொடுத்துள்ளனர். கணேசன் இதே போல் மேலூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமத்தை சேர்ந்தவர்களிடம் ரூ.85 ஆயிரம் பணம் வாங்கி ஏமாற்றி அனுப்பியுள்ளார்.
ஆனால் அவர்களுக்கு லிபியாவில் தினமும் 20 மணிநேரம் வேலை பார்த்தால் மட்டுமே ரூ.8 ஆயிரம் ஊதியம் வழங்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டுக்கு செல்லும் தொழிலாளர்கள் குறைந்த சம்பளத்திற்கு செல்ல ஏற்றுக் கொள்ளக் கூடாது. அவர்கள் அங்கு கைது செய்யப்பட்டால் நெருக்கடியான நிலையை சந்திக்க நேரிடும் என்றார்.