இலங்கை தமிழ் அமைச்சர் வந்த விமானத்தில் பறவை மோதியது
திருச்சி: கொழும்பிலிருந்து திருச்சிக்கு வந்த இலங்கை விமானத்தில் பறவை மோதியது. விமானி பத்திரமாக விமானத்தை தரையிறக்கியதால், அதில் பயணித்த அமைச்சர் முத்துசிவலிங்கம் உள்ளிட்ட 100 பேர் தப்பினர்.
இலங்கையைச் சேர்ந்த மிகின் லங்கா விமான நிறுவனத்தின் விமானம் கொழும்பிலிருந்து திருச்சிக்கு வந்தது.
அந்த விமானத்தில் இலங்கை அமைச்சர் முத்துசிவலிங்கம் உள்பட 100 பயணிகளும், ஊழியர்களும் இருந்தனர்.
விமான நிலையத்தில் விமானம் இறங்கவிருந்த சமயத்தில் திடீரென பறவை மோதியது.
இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் விமானியும், இணை விமானியும் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் விமானத்தை தரையிறக்கினர். இதனால் பயணிகள் அனைவரும் தப்பினர்.
பறவை மோதியதால் விமானத்தின் முன் பகுதி லேசாக சேதமடைந்திருந்தது. அதை சரி செய்த பின்னர் 70 நிமிட தாமதத்திற்குப் பின்னர் விமானம் மீண்டும் கொழும்பு புறப்பட்டுச் சென்றது.