தெலுங்கர்கள் மீது சிவசேனா தாக்குதல்
மகாராஷ்டிராவில் வட இந்தியர்களுக்கு எதிராக ராஜ்தாக்கரேவின் மகாராஷ்டிர நவ நிர்மான் சேனா கட்சி போர்க்கொடி உயர்த்தியுள்ளது. வட இந்தியர்களைக் குறி வைத்து தாக்குதலும் நடத்தப்பட்டது.
இந்த நிலையில் சிவசேனா கட்சியினர் இப்போது மகாராஷ்டிரா அல்லாத மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மீது தாக்குதலை தொடங்கியுள்ளனர்.
ஷிர்டி சாய்பாபா அவதரித்த ஷிர்டி நகரில் இன்று காலை 50க்கும் மேற்பட்ட சிவ சேனா தொண்டர்கள் வணிகப் பகுதியில் குழுமினர். மகாராஷ்டிரா, மராட்டியர்களுக்கே என்று கோஷமிட்டபடி அப்பகுதியில் அவர்கள் ஊர்வலமாக சென்றனர்.
பின்னர் திடீரென தெலுங்கு பேசுவோர் வைத்துள்ள கடைகள் மீது தாக்குதல் நடத்தினர். தெலுங்கில் இருந்த கடை விளம்பரப் பலகைகளை அடித்து நொறுக்கினர். அதேபோல ஆங்கில பெயர்ப் பலகைகளையும் அடித்து நொறுக்கினர்.
பின்னர் ஆவேசக் கூச்சலோடு பல்வேறு பகுதிகளுக்கும் அவர்கள் ஊர்வலமாக செல்ல முயன்றனர். நிலைமை விபரீதமாவதை உணர்ந்த போலீஸார் அனைவரையும் தடுத்து நிறுத்திக் கைது செய்தனர்.
பால் தாக்கரே குடும்பக் கட்சியினர், மகாராஷ்டிரா அல்லாத பிற மாநிலத்தவர்கள் மீது தொடர்ந்து வரும் தாக்குதல்களால் மகாராஷ்டிராவில் பெரும் பதட்டம் நிலவுகிறது.