கிழக்கு தைமூர் அதிபர் சுடப்பட்டார் - படுகாயத்துடன் சிகிச்சை
திலி: கிழக்கு தைமூர் நாட்டின் அதிபர் ஜோஸ் ராமோஸ் ஹோர்டாவை ராணுவத்திலிருந்து நீக்கப்பட்ட புரட்சிக்காரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் அவர் படுகாயம் அடைந்தார். ராணுவத்தினர் அந்த நபரை சுட்டுக் கொன்று விட்டனர்.
கிழக்கு தைமூர் நாட்டின் அதிபராக இருப்பவர் ஜோஸ் ராமோஸ் ஹோர்டா. இவர் நோபல் பரிசு பெற்றவர். தனது வீட்டில் தனியாக இருந்தபோது சில மர்ம நபர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
இதுகுறித்து அந்நாட்டின் பிரதமர் ஸ்நானா கஸ்மா செய்தியாளர்களிடம் கூறுகையில், அதிபர் ஹோர்டா தற்போது மருத்துவமனையில் நல்ல நிலையில் இருக்கிறார். மேற்சிகிச்சை தேவைப்பட்டால் அவர் ஆஸ்திரேலியாவுக்கு கொண்டு செல்லப்படுவார் என்றார்.
பிரதமர் கஸ்மோவின் வீட்டின் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. ஆனால் இதில் யாரும் காயம் அடையவில்லை என அந்நாட்டின் தொலைக்காட்சி ஒன்று தெரிவித்துள்ளது.
ஹோர்டாவை சுட்டவர்களில் ஒருவர் அல்பிரடோ ரெய்னாடோ. இவர் ராணுவத்தில் புரட்சி செய்ய முயன்றதால் நீக்கப்பட்டவர். அரசுக்கு எதிராக ராணுவத்தினரில் ஒரு பிரிவினரை பயன்படுத்தி தாக்குதல் நடத்தப் போவதாகவும் இவர் எச்சரித்திருந்தார்.
இவரை அரசுப் படைகள் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில்தான் ஹோர்டா சுடப்பட்டுள்ளார். அவரை சுட்ட ரெய்னாடோவை ராணுவத்தினர் சுட்டுக் கொன்று விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications