தமிழகத்திற்கு ரூ. 16,000 கோடி திட்ட ஒதுக்கீடு
சென்னை:தமிழகத்திற்கு 2008-09ம் ஆண்டுக்கான திட்ட ஒதுக்கீடாக ரூ. 16,000 கோடியை மத்திய திட்டக் கமிஷன் அறிவித்துள்ளது.
இதுகுறித்து முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழகத்திற்கு கடந்த ஆண்டு திட்ட ஒதுக்கீடாக ரூ. 14,000 கோடி அளிக்கப்பட்டது. இந்த நிலையில், 2008-09ம் ஆண்டுக்கான திட்ட ஒதுக்கீட்டை இறுதி செய்வதற்கான கூட்டம் நேற்று டெல்லியில் நடந்தது.
இதில் தமிழகத்தின் சார்பில் கல்வி அமைச்சர் அன்பழகன் கலந்து கொண்டார். திட்டக் கமிஷன் துணைத் தலைவர் எம்.எஸ். அலுவாலியாவுடன் நடந்த சந்திப்பில், சென்னை மெட்ரோ ரயில் திட்டம், நதிகளை இணைக்கும் திட்டம் உள்ளிட்ட பெரும் திட்டங்களை தமிழக அரசு அமல்படுத்தவிருப்பதால் கூடுதல் நிதி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அப்போது எம்.எஸ். அலுவாலியா தமிழகத்திற்கு ரூ. 15,000 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். ஆனால் இது போதாது என்று தமிழகத்தின் தரப்பில் வலியுறுத்தியதால் ரூ. 16,000 கோடியாக நிதி உயர்த்தப்பட்டது.
தமிழகத்தில் பல்வேறு திட்டங்கள் சிறப்பாக நிறைவேற்றப்பட்டு வருவதைப் பாராட்டிய அலுவாலியா, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்கான சமூக நலத் திட்டங்களையும் தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்துவதாகவும் பாராட்டினார் என்று முதல்வர் கருணாநிதி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications