கம்பம்-அச்சக அதிபரை கத்தியால் குத்திய கும்பல்
கம்பம்: கம்பம் அருகே அச்சக அதிபரை கத்தியால் குத்திய கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.
தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள ஒடக்கரை பகுதியை சேர்ந்தவர் முருகேசன்(50). அச்சக தொழில் நடத்தி வருகிறார். இவருக்கு மூன்று மனைவிகள்.
முருகேசன் வீட்டில் தனியாக இருந்த போது, வீட்டிற்குள் நுழைந்த மூன்று மர்ம நபர்கள் அவரை சரமாரியாக கத்தியால் குத்தினர். படுகாயமடைந்த முருகேசன் அலறிக் கொண்டு வெளியே ஒடி வந்தார். ஆனாலும் அவரை விடாது துரத்தி வந்த அக்கும்பல் மீண்டும் அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டது. இதில் அவர் அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.
இதை கண்டு திடுக்கிட்ட அப்பகுதி மக்கள் உடனே போலீசுக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த டி.எல்.பி. செல்வராஜ், மற்றும் இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.
பின்பு முருகேசனை சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தேனி மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டார்.
போலீஸ் விசாரனையில் முருகேசனை கத்தியால் குத்தியவர்கள் சொக்கலிங்கம், அருளானந்தம், தனசேகரன் என தெரிய வந்தது. அதன் பேரில் அவர்கள் மீது உத்தமபாளையம் இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் வழக்கு பதிவு செய்துள்ளார்.
தலைமறைவாக உள்ள 3 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.