Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராஜ் தாக்கரே கைதாகி விடுதலை!

Subscribe to Oneindia Tamil

Raj Thackeray
மும்பை: கடந்த சில நாட்களாக மகாராஷ்டிர நவ நிர்மான் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரேவை கைது செய்ய 'கவுண்ட்-டவுன்' நடத்திக் கொண்டிருந்த மும்பை போலீஸார் ஒரு வழியாக இன்று அவரைக் கைது செய்தனர். இதையடுத்து அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுவிட்டார்.

முதலில் அமிதாப்பச்சனையும், பின்னர் வட இந்தியர்களையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார் ராஜ் தாக்கரே. இதையடுத்து மும்பை, புனே, தானே, நாசிக் ஆகிய நகரங்களில் வன்முறை வெடித்தது.

ராஜ் தாக்கரே கட்சியினர் வட இந்தியர்களைக் குறி வைத்துத் தாக்குதல் நடத்தினர். தனது பேச்சை நியாயப்படுத்தி மீண்டும் மீண்டும் ராஜ் தாக்கரே பேசியதால் மும்பையில் பெரும் கலவரம் வெடிக்கும் சூழல் உருவானது.

அவர் மீது நடவடிக்ைக எடுக்கக் கோரி சமாஜ்வாடிக் கட்சித் தலைவர் அமர்சிங் சிவாஜி நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர். ஆனால் ராஜ் தாக்கரேவைக் கைது செய்யவில்லை.

இந்த நிலையில் நேற்று விக்ரோலி காவல் நிலையத்தில் புதிதாக ராஜ்தாக்கரே மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கூடவே மகாராஷ்டிர மாநில சமாஜ்வாடிக் கட்சித் தலைவர் அபு அஸ்மி மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இன, மொழி, பிராந்திய அடிப்படையில் கலவரத்ைத தூண்ட முயன்றது உள்ளிட்ட பிரிவுகளில் ராஜ்தாக்கரே மற்றும் அபு ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து அவரைக் கைது செய்ய போலீஸார் நடவடிக்ைக எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ராஜ் தாக்கரேவுக்கு ஆதரவாக பல மத்திய அமைச்சர் சரத் பவார் உள்ளிட்ட பலர் களம் இறங்கியதால் அவரைக் கைது செய்வது தாமதமானது.

இதனால் நேற்று அவர் கைது செய்யப்படவில்லை. இந்த நிலையில் இன்று காலை முதல் ராஜ் தாக்கரே கைது செய்யப்படப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும், பரபரப்பும் கூடிக் கொண்டிருந்தது. தாக்கரே வீட்டைச் சுற்றிலும் போலீஸார் குவிக்கப்பட்டனர். மும்பை நகரின் பல்வேறு பகுதிகளில் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டனர்.

மும்பைக்கு வெகு அருகே உள்ள தானேவில் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.

இந்த நிலையில் ராஜ் தாக்கரேவைக் கைது செய்ய மகாராஷ்டிர அரசு காவல்துறைக்கு இன்று பிற்பகலில் அனுமதி அளித்தது. மேலும் மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் இன்று காலை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து மகாராஷ்டிர விவகாரத்தை விவரித்தார்.

இதையடுத்து ராஜ் தாக்கரேவை கைது செய்ய சோனியா காந்தி பச்சைக் கொடி காட்டியதாக தெரிகிறது.

இதைத் தொடர்ந்து ராஜ்தாக்கரேவைக் கைது செய்ய ஒரு வழியாக மும்பை போலீஸார் முடிவு செய்தனர். மேலும், பள்ளிகள், கல்லூரிகள் முடிந்த பின்னர் மாலையில் அவரைக் கைது செய்ய திட்டமிடப்பட்டது.

அதன்படி இன்று மாலை நாலரை மணியளவில் ராஜ்தாக்கரே கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர் மும்பை விக்ரோலி நீதிமன்ற மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை நீதிபதி நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்தார்.

இதனால் கைதான சில மணி நேரத்திலேயே ராஜ் தாக்கரே விடுதலையாகிவிட்டார்.

முன்னதாக நீதிமன்றம் விதித்த சில நிபந்தனைகளை ஏற்க முடியாது என ராஜின் வழக்கறிஞர் வாதிட்டார். அப்படியானால் சிறைக்கு போக வேண்டியது தான் என நீதிபதி கண்டிப்பாக கூறவே நிபந்தனைகளை ஏற்றார்.

அதேபோல சமாஜ்வாடிக் கட்சித் தலைவர் அபு அஸ்மியும் கைது செய்யப்பட்டார். இருவர் மீதும் ஒரே பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அபு அஸ்மியும் ஜாமீனில் விடுதலை

கைது செய்யப்பட்ட சமாஜ்வாடிக் கட்சித் தலைவர் அபு அஸ்மி, பொய்வாடா நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு அவரது சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதைப் பரிசீலித்த நீதிபதி ரூ. 10 ஆயிரம் ஜாமீனில் அவரை விடுதலை செய்து உத்தரவிட்டார்.

ராஜ்தாக்கரே கைதைக் கண்டித்து அவரது கட்சியினர் மும்பையின் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம், சாலை மறியல் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளனர். அவர்களைப் போலீஸார் கைது செய்தனர்.

கோலாப்பூர், கல்யாண் ஆகிய பகுதிகளில் சில பேருந்துகள் கல் வீசித் தாக்கப்பட்டன.

மும்பை நகர் முழுவதும் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் துணை நிலை ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். கலவரம் மூண்டால் சமாளிக்கும் வகையில் போலீஸார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

புனேவில் பஸ்கள் சேதம்:

முன்னதாக புனேவில் ராஜ்தாக்கரே கட்சியினர் நடத்திய கல்வீச்சில் 12 அரசுப் பேருந்துகள் சேதமடைந்தன.

மோட்டார் சைக்கிளில் வந்த ராஜ் தாக்கரே கட்சியினர் சரமாரியாக பஸ்கள் மீது கற்களை வீசித் தாக்கினர். கடைகளையும் அடைக்க்க கோரி மிரட்டி விட்டுச் சென்றனர்.

இதன் காரணமாக லட்சுமி சாலை பகுதியில் உள்ள மார்க்கெட்டில் அனைத்துக் கடைகளும் வேகமாக மூடப்பட்டன. தள்ளு வண்டிக் கடைக்காரர்களும் வியாபாரத்தை நிறுத்தி விட்டு உயிர் தப்பி ஓடினர்.

நகரின் பல பகுதிகளிலும் ராஜ் தாக்கரே கட்சியினர் அராஜகம் செய்ததால் மும்பை பீதியில் உள்ளது.

ராஜுக்கு ஷாருக் எதிர்ப்பு:

இதற்கிடையே மும்பையை விட்டு வட மாநிலத்தவர்களை வெளியேறச் சொல்லும் ராஜ் தாக்கரேவுக்கு நடிகர் ஷாருக் கான் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

அவர் கூறுகையில், இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் நாட்டின் எந்த இடத்துக்கும் சென்று வசிக்கவோ, தொழில் செய்யவோ உரிமை உண்டு. இது மாதிரி பிரச்சினைகளை அரசியல் கட்சிகளை விட தனிப்பட்டவர்கள்தான் கிளப்புகிறார்கள். படித்தவர்கள், கல்வியறிவு உள்ளவர்கள் யாரும் இது போல் பேச மாட்டார்கள் என்றார்.

நடிகர் ஷாருக் கான் டெல்லியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+