விபத்தில் இறந்த தொண்டர் குடும்பத்துக்கு சரத் நிதியுதவி
புளியங்குடி:விபத்தில் பலியான அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தொண்டரின் குடும்பத்திற்கு அக்கட்சித் தலைவர் சரத்குமார் ரூ.50,000 நிதியுதவி அளித்தார்.
மதுரையில் கடந்த 10ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சரத் கட்சியின் முதல் அரசியல் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு நெல்லை மாவட்டம், சிவகரி அருகேயுள்ள பள்ளிகூடத் தெருவை சேர்ந்த தொழிலாளி தங்கவேலின் மூத்த மகன் சிவன் நாடார் சென்றார்.
அவர் டி.கல்லுபட்டி அருகே காரை நிறுத்தி பேசிக் கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கி பலியானார். பின்னர் அவரது உடல் சொந்த ஊரான ராயாகிரியில் அடக்கம் செய்யப்பட்டது.
இந் நிலையில் சரத்குமார் ராயாகிரி வந்தார். சிவன் நாடாரின் பெற்றொர் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி நிவாரணமாக ரூ.50,000 வழங்கினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மதுரையில் நடந்த மாநாட்டிற்கு வந்து விபத்தில் சிக்கி இறந்தவரின் குடும்பத்திற்கு கோடி கோடியாக கொடுத்தாலும் இந்த பேரிழப்பை ஈடு செய்ய இயலாது. இவருடைய பெற்றொர் கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வருவதாக அறிந்தேன்.
மூத்த மகனை இழந்து தவிக்கும் குடும்பத்தினர் என்னை மூத்த மகனாக நினைத்து கொள்ளட்டும் என ஆறுதல் கூறியுள்ளேன். இக் குடும்பத்தில் படித்து வரும் பெண் குழந்தைகளுக்கு மாவட்ட கட்சி நிர்வாகிகள் அனைத்து உதவிகளையும் செய்வர்.
எந்த கட்சி மாநாடு நடைபெற்றாலும் அந்தந்த கட்சி தொண்டர்கள் பாதுகாப்பாக சென்று திரும்ப வேண்டும் என நான் கேட்டுக் கொள்கிறேன் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications