இடைத் தேர்தல்-திடீரென வாபஸ் வாங்கிய தேமுதிக வேட்பாளர்
கம்பம்: தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத் தேர்தலில், போட்டியிலிருந்து திடீரென வாபஸ் பெற்றுவிட்டார் தேமுதிக வேட்பாளர். அவரை கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்று விஜயகாந்துக்கு தொண்டர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் பேரூராட்சி 15வது வார்டு உறுப்பினராக இருந்தவர் சையது மீரான். இவர் பேரூராட்சி துணைத் தலைவராகவும் பதவி வகித்தார். அவர் சமீபத்தில் இறந்து போனதால் அந்த வார்டுக்கு இடைத் தேர்தல் நடக்கிறது
சையது மீரானின் மகன் அப்துல் காசிம் திமுக சார்பில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் அழகு சுப்பிரமணியன் போட்டியிடுகிறார். தேமுதிக சார்பில் உத்தமபாளையம் நகரச் செயலாளர் அபுபக்கர் களம் இறக்கப்பட்டார்.
இந் நிலையில் தனது வேட்பு மனுவை திடீரென வாபஸ் பெறுவதாக தேமுதிக வேட்பாளர் அபுபக்கர் அறிவித்தார்.
இந்த தகவல் கிடைத்த உடன் தேமுதிக நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக கூடி ஆலோசனை நடத்தினர். அதில், தொண்டர்களின் விருப்பத்திற்கு மாறாக வேட்பு மனுவை வாபஸ் பெற்ற அபுபக்கரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினர்.
அபுபக்கர் போட்டியிலிருந்து விலக உடந்தையாக இருந்த மாவட்டச் செயலாளர் முருகேசனை மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கவேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றினர்.
இவர்கள் இருவரும் மாற்று கட்சியினரிடம் பணம் வாங்கிக் கொண்டு கட்சியை அழித்து விட்டதாகவும் கட்சி நிர்வாகிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.












Click it and Unblock the Notifications