சென்னை தலித் மாணவர் விடுதியில் ரவுடிகள் தாக்குதல்-8 மாணவர்களுக்கு கத்திக்குத்து
சென்னை சைதாப்பேட்டையில் ஆதி திராவிடர் மாணவர்களுக்காக எம்.சி.ராஜா அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதி உள்ளது.
இங்கு 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கியுள்ளனர். ஆனால் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக இந்த விடுதியை ரவுடிகள் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளனர். கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட ரவுடிகள் இங்கு தங்கியுள்ளனராம்.
இவர்கள் அனைவரும் கண்ணம்மாபேட்டை, தேனாம்பேட்டை பகுதிகளைச் சேர்ந்தவர்கள். இதுகுறித்து அரசிடம் மாணவர்கள் பலமுறை புகார் அளித்தும் ஒரு நடவடிக்கையும் இல்லை. அரசு ரவுடிகளை வெளியேற்றாமல் கண்டும் காணாத போக்கில் இருந்ததால், ரவுடிகளிடம் சிக்கி அடிக்கடி அடிபடுவது மாணவர்களுக்கு வழக்கமானதாக இருந்திருக்கிறது.
இந் நிலையில் நேற்று இரவு திடீரென 20க்கும் மேற்பட்ட ரவுடிகள் கத்தி, அரிவாள், இரும்புக் கம்பிகள், உருட்டுக் கட்டைகளுடன் மாணவர்கள் மீது கொலை வெறித் தாக்குதலில் ஈடுபட்டனர்.
கண்ணில் பட்டவர்களையெல்லாம் வெட்டித் தள்ளினர். மாணவர்கள் தப்ப முயன்றபோது ஓட ஓட வெட்டப்பட்டனர்.
இதில் 8 மாணவர்கள் படுகாயமடைந்தனர். அவர்களில் 5 பேர் மிகக் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளனர். அவர்களது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
30 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தும் உடனடியாக அவர்கள் வரவில்லை. இதையடுத்து சட்டக் கல்லூரி மாணவர்கள், கலைக் கல்லூரி மாணவர்கள் சென்டிரல் ரயில் நிலையம் முன்பு சாலை மறியலில் குதித்தனர். இதையடுத்து அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்தே போலீஸார் விரைந்து வந்து காயம் பட்ட மாணவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
ரவுடிகளின் மூர்க்கத்தனமான தாக்குதலில் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட நூலகம் முற்றிலும் சேதமடைந்து விட்டது. அங்கிருந்த பொருட்கள், புத்தகங்கள் தாறுமாறாக சிதைக்கப்பட்டுள்ளன.
சம்பவம் நடந்த மாணவர் விடுதி, சென்னை மாநகராட்சி மேயர் மா.சுப்ரமணியத்தின் வார்டின் கீழ் வருகிறது.
இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு நிலவுகிறது. ரவுடிகளை வெளியேற்றுவதோடு மட்டுமல்லாமல் கொலை வெறித் தாக்குதல் நடத்தியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி கோட்டை நோக்கி பேரணி நடத்தப் போவதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.