மணந்த மறு நாளே பிரிக்கப்பட்ட காதல் ஜோடி!
முதுகுளத்தூர்: ஊரை விட்டு ஓடி வந்து கோவிலில் கல்யாணம் செய்து கொண்ட காதல் ஜோடியை, பெண்ணின் பெற்றோர் பிரித்து தங்களது ஊருக்கு அழைத்துச் சென்ற சம்பவம் முதுகுளத்தூரில் நடந்தது.
திருச்சியைச் சேர்ந்த சந்திரசேகரன் திருப்பூரில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்த்து வருகிறார். அதே நிறுவனத்தில் வேலை பார்க்கும் திருச்சியைச் சேர்ந்த சுகப்பிரியாவை காதலித்தார்.
இருவரும் வெவ்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதால் காதலை இரு குடும்பத்தாரும் ஏற்கவில்லை. இதையடுத்து முதுகுளத்தூருக்கு வந்து நண்பர்கள் உதவியுடன் நேற்று முன்தினம் அங்குள்ள சுப்பிரமணியர் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
இதையடுத்து சுகப்பிரியாவின் குடும்பத்தினரும், உறவினர்களும் முதுகுளத்தூர் வந்தனர். சுகப்பிரியாவை வலுக்கட்டாயமாக தங்களுடன் அழைத்துக் கொண்டு பஸ் நிலையம் சென்றனர்.
பின்னாலேயே வந்த சந்திரசேகரன், சுகப்பிரியாவை இப்போது என் மனைவி, அவரை அனுப்ப மாட்டேன் என மறுத்தார். அதேபோல சுகப்பிரியாவும் குடும்பத்தினருடன் போக மறுத்தார். இதனால் பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் கிடைத்து போலீஸார் விரைந்து வந்தனர். இரு தரப்பையும் காவல் நிலையத்திற்குக் கூட்டிச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சுகப்பிரியாவின் பெற்றோர் தங்களுடன் மகளை அனுப்பி வைக்குமாறு கூறி கண்ணீர் விட்டு கதறினர்.
அவர்களது அழுகையைப் பார்த்து பார்த்து உருகிய சந்திரசேகரன், சுகப்பிரியாவை அவரது பெற்றோருடன் செல்ல அனுமதிப்பதாகத் தெரிவித்தார். அதன் பின்னர் சுகப்பிரியா கண்ணீர் மல்க பெற்றோருடன் புறப்பட்டுச் சென்றுவிட்டார்.
நொந்து போனபடி அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் கண்ணீருடன் கிளம்பிச் சென்றார் சந்திரசேகரன்.












Click it and Unblock the Notifications