காதலனுடன் மனைவி ஓட்டம் - மகன்களைக் கொன்று கணவர் தற்கொலை
ஏற்காடு: மனைவி கள்ளக் காதலனுடன் ஓடி விட்டதால் மனம் உடைந்த எஸ்டேட் அதிபர் தனது இரண்டு மகன்களையும் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டார்.
சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே உள்ள தலைச்சோலை என்ற பகுதியைச் சேர்ந்தவர் அருணாச்சலம் (35). இவருக்கு சொந்தமாக காபி எஸ்டேட் உள்ளது. இவரது மனைவி தனலட்சுமி (30). இவர்களுக்கு கார்த்திகேயன் என்ற 9 வயது மகனும், ஜெகதீஸ்வரன் என்ற 6 வயது மகனும் உள்ளனர்.
கடந்த ஆண்டு திடீரென வீட்டை விட்டு ஓடினார் தனலட்சுமி. போலீஸார் தீவிரமாக தேடி அவரைக் கண்டுபிடித்தபோது கள்ளக் காதலன் அண்ணாமலை என்பவருடன் தனலட்சுமி வசித்து வந்தது தெரிய வந்தது.
பின்னர் போலீஸாரிடம் கணவர் வீட்டுக்குச் செல்வதாக தனலட்சுமி கூறியதால் போலீஸார் அவரை அருணாச்சலத்துடன் சேர்த்து வைத்தனர்.
இந்த நிலையில் சமீபத்தில் மீண்டும் அண்ணாமலையிடம் போய் விட்டார் தனலட்சுமி. இதனால் அருணாச்சலம் அதிர்ச்சி அடைந்தார். போனதோடு நில்லாமல் விவாகரத்து கேட்டு அருணாச்சலத்துக்கு நோட்டீஸ் அனுப்பினார் தனலட்சுமி.
இதனால் மனம் உடைந்தார் அருணாச்சலம். நேற்று முன்தினம் இரவு தனது இரு மகன்களையும் தூக்கில் போட்டுக் கொலை செய்தார். பின்னர் அவரும் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
சாவதற்கு முன்பு அருணாச்சலம் ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளார். அதில் அண்ணாமலை துரோகம் செய்து விட்டதாகவும், தனலட்சுமியுடன் வாழ்வேன், உன்னால் என்ன செய்ய முடியும் என சவால் விட்டதாகவும், இதற்கு மேலும் வாழ்வதில் எந்த அர்த்தமும் இல்லை என்று எழுதி வைத்துள்ளார்.
3 உடல்களையும் மீட்டு ஏற்காடு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications