2வது தலைநகர் திருச்சி-இ.கம்யூ கோரிக்கை!
திருச்சி: திருச்சியை சென்னைக்கு அடுத்து 2வது தலைநகராக, இணைத் தலைநகராக அறிவிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு திருச்சி மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து கட்சியின் 3 நாள் மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அத்தீர்மானத்தில், திருச்சி நகரம், தமிழகத்தின் மத்தியில் அமைந்துள்ள முக்கிய நகரமாகும். மாநிலத்தின் அனைத்துப் பகுதிக்கும் மையத்தில் உள்ளதால், இங்கு தலைமைச் செயலகத்தின் சில பிரிவு அலுவலகங்களையும், சில துறைகளின் அலுவலகங்களையும் இங்கு மாற்ற வேண்டும்.
தமிழகத்தின் 2வது தலைநகராக, இணைத் தலைநகராக திருச்சியை அறிவிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது.
மற்றொரு தீர்மானத்தில், திருச்சியில் புறநகர் மின்சார ரயில் திட்டத்தை அமல்படுத்த ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் திருச்சி புறநகர்ப் பகுதிகளான திருவெறும்பூர், துவாக்குடி, பொன்மலை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், மாணவர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்கு நிறைய பலன் கிடைக்கும் என்று கூறப்பட்டிருந்தது.
இன்னொரு தீர்மானத்தில், திருச்சி அரசு கி.ஆ.பெ. விஸ்வநாதம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை, அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழக அளவுக்கு தரம் உயர்த்த வேண்டும்.
ஏற்கனவே இதுதொடர்பான திட்டத்தை மத்திய சுகாதாரத் துறை அறிவித்திருந்தது. ஆனால் திடீரென அதை சேலம் மருத்துவமனைக்கு மாற்றி விட்டனர். இதனால் திருச்சி நகர மக்கள் பெரும் மன வேதனைக்கு ஆளாகியுள்ளனர். எனவே இந்தத் திட்டத்தை மீண்டும் திருச்சிக்கே கொண்டு வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும், சேது சமுத்திரத் திட்டத்தை விரைவாக நிறைவேற்ற வேண்டும், பெட்ரோலிய பொருட்கள் மீதான விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.