திருமண மண்டபம் எரிப்பு-ஒருவர் அடித்து கொலை
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே முன்விரோதம் தொடர்பாக திருமண மண்டபம் தீ வைத்து எரிக்கப்பட்டது. ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார்.
கும்ரி மாவட்டம் இரணியல் அருகே மல்லன்கோடு பகுதியை சேர்ந்தவர் மாதவபிரசாத். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் ஊர் திருமண மண்டப வருமானத்தை யார் எடுப்பது என்பது குறித்து சமீபகாலமாக முன் விரோதம் இருந்து வந்தது.
நேற்று முன்தினம் இரவு மாதவ பிரசாத், அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் பிள்ளை மற்றும் வேணு ஆகிய மூவரும் அப்பகுதியில் உள்ள அம்மன் கோவில் அருகே பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த முருகானந்தம், மாதவதாஸ், கிருஷ்ணதாஸ், ஐயப்பன், கிருஷ்ணகுமார் உள்பட 20க்கும் மேற்பட்டோர் ஆயுதங்களுடன் வந்து மாதவ பிரசாத்தையும் அவருடன் இருந்த ஆறுமுகம் பிள்ளையையும் கடுமையாக தாக்கினர். மேலும் அப்பகுதியில் உள்ள திருமண மண்டபத்தை அடித்து உடைத்து அங்கிருந்த நாற்காலி, பெஞ்சுகளை தீயிட்டு கொளுத்தினர்.
இதுகுறித்து மாதவபிரசாத் கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் 20 பேர் மீது வழக்கு பதிந்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் மல்லன்கோடு பகுதியை சேர்ந்த அஜீதா இரணியல் போலீசில் ஒரு புகார் கொடுத்தார்.
அப்புகாரில் தனது தந்தை ஸ்ரீதரன் பிள்ளையை அதே பகுதியை சேர்ந்த மாதவ பிரசாத் தலைமையிலான 20 பேர் கொண்ட கும்பல் ஆயுதங்களால் தாக்கியதில் அவர் படுகாயம் அடைந்தார். தற்போது லெட்சுமிபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் புகாரில் கூறியிருந்தார்.
இந்தப் புகாரின் பேரில் 20 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த நிலையில் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட ஸ்ரீதரன் பிள்ளை மேல்சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நேற்று இரவு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இந்த இரு சம்பவங்களால் அங்கு பெரும் பரபரப்பும், பதட்டமும் ஏற்படுகிறது.