தமிழக சட்டம்-ஒழுங்கு: மத்திய அமைச்சர் திருப்தி
ராமநாதபுரம்: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டதாக சிலர் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அந்த அளவுக்கு எந்த சம்பவங்களும் தமிழகத்தில் நடக்கவில்லை என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு நெருக்கமான மத்திய உள்துறை இணையமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் கூறியுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் ஒரு தனியார் கல்லூரி விளையாட்டு போட்டி நிறைவு விழாவில் மத்திய உள்துறை இணை அமைச்சர் ஜெய்ஸ்வால் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டதாக சிலர் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அந்த அளவுக்கு எந்த சம்பவங்களும் தமிழகத்தில் நடக்கவில்லை.
தமிழக சட்டசபையில் காங்கிரஸ் வெளிநடப்பு செய்ததற்கு காரணம் விடுதலைப் புலிகள் ஊடுருவல் பிரச்சனை அல்ல. விடுதலைப்புலிகள் குறித்து பேச அனுமதிக்காதற்காகத்தான் வெளி நடப்பு செய்தனர். புலிகளை ஒடுக்க திமுக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கையில் நடக்கும் போர் பதட்டம் காரணமாக கடலோரத்தில் தீவிரமாக கண்காணாணிப்பை அதிகப் படுத்தப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் மத்திய அரசு கூடுதல் வசதிகளை அளிக்கும்.
தமிழகம் மற்றும் கர்நாடகத்தில் நக்ஸல்கள் நடமாட்டம் குறிப்பிடும்படியாக இல்லை. ஆயுதம் எடுத்தவர்கள் எல்லாம் நக்சல்கள் என்று கூறிவிட முடியாது என்றார்.