சிவாஜி கணேனுக்கு அரசே நினைவிடம் அமைக்க கோரிக்கை
ஸ்ரீரங்கம்: சென்னையில் மறைந்த நடிகர் சிவாஜி கணேசனுக்கு நினைவிடம் மைக்க வேண்டும் என முதல்வர் கருணாநிதிக்கு, சிவாஜி சமூக நல பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.
பேரவையின் தலைவர் சந்திரசேகரன் ஸ்ரீரங்கத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு நினைவிடம் அமைப்பதற்காக அரசு 0.65 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியது. இந்தப் பொறுப்பை தென்னிந்திய நடிகர் சங்கத்திடம் ஒப்படைத்தது. ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக இதுதொடர்பாக எந்த நடவடிக்கையையும் நடிகர் சங்கம் எடுக்கவில்லை.
இந்த பிரச்சினை தொடர்பாக 2005ம் ஆண்டு ஏப்ரல் 12ம் தேதி சட்டசபையில் அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டார்.
எனவே முதல்வர் கருணாநிதி இதில் தலையிட்டு அரசு சார்பில் நினைவிடம் அமைத்து, சிவாஜி கணேசனுக்கு கெளரவம் சேர்க்க வேண்டும். இதுதொடர்பாக முதல்வரை சந்தித்துப் பேசவுள்ளோம்.
மாவட்டத் தலைநகரங்கள் மற்றும் அனைத்து மாநகராட்சிகளிலும் சிவாஜி கணேசனின் முழு உருவச் சிலைகளை அரசு நிறுவ வேண்டும் என்று பேரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
விரைவில் தஞ்சை மற்றும் திருச்சி நகரங்களில் சிவாஜி கணேசன் சிலை திறந்து வைக்கப்படும் என்றார் சந்திரசேகரன்.