வன்முறையுடன் நடந்து முடிந்த பாக். தேர்தல்

காலை 8 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியவுடன் ஸ்வாத் வேலி பகுதியில் குண்டு வெடிப்பு நடந்ததில் பலர் காயமடைந்தனர். லாகூரில் நவாஸ் ஷெரீபின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் வேட்பாளர் உள்பட 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனால் அப் பகுதியில் வன்முறை வெடித்தது.
அதிகாலையில் வட மேற்கு பாகிஸ்தானில் ஒரு வாக்குச் சாவடி குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. நல்ல வேளையாக அந்த நேரத்தில் யாரும் அங்கில்லை.
தெற்குப் பகுதியில் உள்ள பலுசிஸ்தானிலும் தொடர்ச்சியாக பல இடங்களில் குண்டுகள் வெடித்தன. இதில் பலர் காயமடைந்துள்ளனர். குவேட்டா பகுதியில் வன்முறையுடன் தேர்தல் நடந்து முடிந்தது.
காலை 8 மணிக்குத் தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. இதில் 80 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். ஆனால், மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே மக்கள் வாக்களிக்க வந்தனர்.
தேர்தலையொட்டி சுமார் 80,000 போலீசாரும் ராணுவத்தினரும் நாடு முழுவதும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த ஜனவரி 8ம் தேதி தேர்தல் நடத்த முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவரும், முன்னாள் பிரதமருமான பெனாசிர் பூட்டோ படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து தேர்தல் தள்ளி வைக்கப்பட்டு இன்று நடந்தது.
முறையாக தேர்தல் நடந்தால் பாகிஸ்தான் மக்கள் கட்சியும், நவாஷ் ஷெரீப் தலைமையிலான முஸ்லீம் லீக் கட்சியும் பெரும் வெற்றி பெறும் என கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன.
நாடாளுமன்றத்துடன் நான்கு மாகாண சட்டசபைகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. இதில் முஷாரப்பின் எதிர்ப்பாளர்கள் வென்றால் அவரது பதவிக்கு சிக்கல் எழக்கூடும்.
தனக்கு சிக்கல் வந்தால் என்ன வேண்டுமானாலும் செய்பவர் முஷாரப். ஆட்சியைக் கூட கலைப்பார். இதனால் இந்தத் தேர்தல் உலகம் முழுவதும் மிகக் கூர்ந்து கவனிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications