பிற ஏடிஎம்களில் பணம் எடுப்பது இலவசமாகிறது
மும்பை: வங்கிகளின் ஏடிஎம் மையங்களில் பணம் எடுப்பது இலவச சேவையாக்கப்படும் என ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் வி.லீலாதர் தெரிவித்துள்ளார்.
தற்போது நமது வங்கி அல்லாத பிற வங்கி ஏடிஎம் மையங்களில் கார்டு போட்டு பணம் எடுத்தால் அதற்கென தனியாக கட்டணம் செலுத்த வேண்டும். பணம் எடுக்கும்போதே அதை பிடித்துக் கொள்வார்கள். இப்போது இந்த முறையை ரத்து செய்ய ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து மும்பையில் நடந்த யூனியன் பாங்க் ஆப் இந்தியாவின் 2001வது கிளைத் தொடக்க விழாவில் லீலாதர் பேசுகையில், பிற வங்கி டெபிட் கார்டுகளை போட்டு பணம் எடுப்போருக்கு தற்போது வங்கிகள் கட்டணம் வசூலித்து வருகின்றன.
வாடிக்கையாளர்கள், வெறும் 500 ரூபாய் எடுக்க வேண்டும் என்றாலும் கூட ரூ. 250 வரை கட்டணமாக செலுத்த வேண்டியுள்ளது. இது மிகவும் கேலிக்குரியதாக இருக்கிறது.
இங்கிலாந்து மற்றும் பல்வேறு நாடுகளில் ஏடிஎம் மையங்களில் பணம் எடுத்தால், சேவைக் கட்டணம் எதையும் வசூலிப்பதில்லை. அதேபோல இந்தியாவிலும் அமல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. 2009-10ம் நிதியாண்டு முதல் இது அமலுக்கு வரும்.
அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் பிற வங்கி ஏடிம் மையங்களில் பணம் எடுப்போர் வெறும் ரூ. 20 கட்டணம் மட்டும் கட்டினால் போதும். இது பணப் பரிவர்த்தனை கட்டணமாக வசூலிக்கப்படும்.
ஒரு ஏடிஎம் மையத்தை அமைக்க முன்பு ரூ. 30 லட்சம் வரை செலவானது. தற்போது அது வெகுவாக குறைந்து ரூ. 6 லட்சம் என்று குறைந்துள்ளது. எனவே வாடிக்கையாளர்களிடமிருந்து பணத்தைக் கறக்கும் செயலை நிறுத்தியாக வேண்டும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications