'ஈவ்-டீசிங்': 5 யுனானி மருத்துவ கல்லூரி மாணவர்கள் கைது
சென்னை: ஸ்டிரைக்கில் கலந்து கொள்ளாத மாணவியை ஈவ் டீசிங் செய்ததாக 5 யுனானி மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் அந்தக் கல்லூரியில் பரபரப்பு நிலவுகிறது.
சென்னையில் உள்ள யுனானி மருத்துவக் கல்லூரி முதல்வர் ஷாகுல் அமீது மீது சமீபத்தில் பல்வேறு புகார்களைக் கூறி மாணவ, மாணவியர் தொடர் போராட்டம் நடத்தினர். இதையடுத்து அவர் மாற்றப்பட்டார்.
இந் நிலையில், சென்னை பெரியார் நகர் 12வது தெருவில் வசிக்கும் ஆயிஷா நியோபர் என்ற மாணவி, மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில், நான் யுனானி மருத்துவக் கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கிறேன். நான் ஸ்டிரைக்கில் கலந்து கொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள், சிலர் என்னை கேலி செய்து ஈவ் டீசிங்கில் ஈடுபடுகின்றனர்.
அந்த மாணவர்களின் செயலால் நான் மிகவும் வேதனை அடைந்துள்ளேன். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார் ஆயிஷா.
இதையடுத்து துணை ஆணையர் ஜெயகவுரி தலைமையிலான போலீஸ் படை சம்பந்தப்பட்ட மாணவர்கள் தங்கியிருந்த வீட்டுக்கு விரைந்தது.
அங்கிருந்த மாணவர் பேரவை தலைவர் நயீப் அகமது, முகம்மது இமாசுதீன், முகம்மது ஆதம், சமீத் சமீனுல்லா, ஆதிப் அசேன் ஆகிய ஐந்து பேரையும் கைது செய்தனர்.
பின்னர் நேற்று இரவே நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்ட ஐந்து பேரும் உடனடியாக புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் யுனானி மருத்துவக் கல்லூரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இடமாற்றம் செய்யப்பட்ட முதல்வரின் தூண்டுதலின் பேரிலேயே ஆயிஷா இந்தப் புகாரை கொடுத்துள்ளதாக மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
முதல்வரின் தூரத்து உறவினர்தான் ஆயிஷா. எனவே முதல்வரின் தூண்டுதலின் பேரிலேயே அவர் பொய்யான புகாரைக் கொடுத்துள்ளார். இதுகுறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும் என அவர்கள் கோரியுள்ளனர்.
கல்லூரி வளாகத்தில் பதட்டமாக இருப்பதால் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications