அரிசி கடத்தல்-தீவிர நடவடிக்கை எடுக்க கருணாநிதி உத்தரவு

இது தொடர்பாக இன்று முதல்வர் கருணாநிதி, தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், நிதித் துறை செயலாளர், உணவுத் துறை செயலாளர் ஆகியோருடன் விரிவாக ஆலோசனை நடத்தினார். இதன் பின்னர் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
ஏழை எளிய மக்கள் பயனடைய வேண்டுமென்ற குறிக்கோளுடன் இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு கிலோ அரிசி ரூபாய் 2க்கு வழங்கும் திட்டத்தை திமுக அரசு பதவிப் பொறுப்பு ஏற்றவுடன் அமலுக்கு கொண்டு வந்தது.
இந்தத் திட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்று வருவதை மற்ற மாநிலங்கள் எல்லாம் பாராட்டி வருகின்றன. ஆனால், இந்தத் திட்டத்திற்கு இடையூறு விளைவிக்க சிலர் முயன்று வருகின்றனர்.
இதைத் தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் வருவாய்த் துறை, உணவு வழங்கல் துறை அதிகாரிகள் அரிசி கடத்தலைத் தடுப்பதை முக்கியப் நேர்வாகக் கருதி அதற்கு முன்னுரிமை கொடுத்து, சிறப்புக் குழுக்களை அமைத்து, கண்காணிப்பது தீவிரப்படுத்தப்படும்.
எல்லையோர மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் ஏற்கனவே அமைக்கப்பட்ட சிறப்பு கண்காணிப்புக் குழுக்களை மாவட்ட ஆட்சியர்கள் திறமையாகப் பயன்படுத்தி அரிசி கடத்தலை முற்றிலுமாக தடுப்பதுடன், மாநில எல்லைக்கு அருகேயுள்ள பிற மாவட்டங்களான திருவள்ளூர், திருவண்ணாமலை, காஞ்சீபுரம் போன்ற மாவட்டங்களிலும் காவல் துறைக் குழுக்களின் மூலமாக கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்.
திருவள்ளூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, தஞ்சாவூர் போன்ற மாவட்டங்களில் விரைவாக கூடுதல் பிரிவுகள் அரிசி கடத்தல் தடுப்பு காவல் பிரிவு மூலமாக அமைத்து அரிசி கடத்தலை முழுமையாகத் தடுத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மாநில அளவில் அரிசி கடத்தலுக்கு பின் பலமாக உள்ள நபர்களையும், அதில் கூட்டாக ஈடுபடும் பிற நபர்களைப் பற்றிய தகவல்களையும் சேகரித்து, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கும் பணி தீவிரப்படுத்தப்படும்.
கடத்தலில் ஈடுபடும் வாகனங்கள் பிடிபடும்போது அதன் உரிமையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுப்பதோடு, பிடிபட்ட வாகனங்களின் உரிமங்களும், அந்த வாகனங்களை ஓட்டுபவர்களின் உரிமங்களும் உடனடியாக ரத்து செய்யப்படும்.
அரிசி கடத்தலைத் தடுத்திட மாநில எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் சிறப்பு அலுவலர்கள் அமர்த்தப்படுவார்கள்.
உணவு கடத்தல் தடுப்புக் காவல் அலுவலர்கள், ரயில்வே காவல் பிரிவு அலுவலர்களுடன் இணைந்து அடிக்கடி சோதனைகள் நடத்தி ரயில்கள் மூலமாக கடத்தல் நடைபெறுவதை முற்றிலுமாக தடுத்திடும் பணியில் ஈடுபடுவர் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications