மதுரை-மறு பிறவியெடுத்த சுடுகாடு!
மதுரை: மதுரை மாட்டுத்தாவணி அருகே மாநகராட்சி ஊழியர்களால் இடித்துத் தள்ளப்பட்ட சுடுகாடு, மக்கள் போராட்டம் காரணமாக மீண்டும் அதே இடத்தில் அமைக்கப்பட்டு விட்டது.
மதுரை சம்பளக்குளம் பொது மக்களுக்கு உரிய சுடுகாடு மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையம் அருகில் புதூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது.
இந்த இடத்திற்கு எதிரில் ஒரு வணிக வாளாகம் கட்டப்பட்டு வருகிறது. அதற்காக சுடுகாட்டை வேறு இடத்திற்கு மாற்ற மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில் இந்த பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒருவர் இறந்து போக அவரை அந்த சுடுகாட்டில் வைத்து எரிக்க முயற்சி மேற் கொண்டனர். அதை மாநகராட்சி ஊழியர்கள் எதிர்த்தனர்.
இதனால் சடலத்தை ரோட்டில் வைத்து மறியல் செய்தனர். பிரச்சனை வெடித்தது. இதனால் சுடு காட்டில் தகனம் செய்ய அனுமதித்தனர்.
ஆனால் அன்று இரவே அந்த சுடு காட்டை புல் டோசர் வைத்து இடித்து விட்டனர். இதனால் மக்கள் கொதித்து போய் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுக்கையிட்டனர்.
இதனால் மதுரை மாவட்ட நிர்வகம் சார்பில் மதுரை சம்பக்குளம், மாநகராட்சி நிர்வாகம், போலீஸ் ஆகியோர் கலந்து கொண்ட அமைதிக் கூட்டம் நடத்தப்பட்டது. ஆனால் இந்த பேச்சுவார்தை தோல்வியில் முடிந்தது.
இந்த நிலையில் சுடுகாட்டை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநகராட்சி சார்பில் போலீஸ் புகார் செய்யப்பட்டது.
இதையடுத்து புதிய திருப்பமாக, சம்பளக்குளம் சுடுகாடு தொடர்ந்து மக்களுக்கு பயன்பாட்டிற்கு செயல்படுத்தப்படும் என மாவட்ட கலெக்டர் ஜவகர் அறிவித்துள்ளார். இதனால் மதுரையில் அனல் பறந்த சுடுகாடு பிரச்சனை ஓய்ந்தது.