ஆறே மாணவர்கள்.. ஒரு 'ஒன்டர்' ஸ்கூல்!
நெல்லை: நெல்லை மாநகராட்சியில் ஆறு மாணவர்களை மட்டுமே கொண்டு ஒரு நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. மாணவர்களுக்காக ஏங்கும் இந்த மாநகராட்சி பள்ளியின் எதிர்காலம் குறித்து அப்பகுதி மக்கள் கேள்வி குறி எழுப்புகின்றனர்.
நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறையில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. செய்யது பீடி உரிமையாளர் ரப்பானி மற்றும் அவரது குடும்பத்தினர், முன்னாள் எம்எல்ஏ கோபாலகிருஷ்ணன், டாக்டர் சின்னசாமி உள்ளிட்ட பிரபலங்கள் படித்த பெருமையை இப்பள்ளி பெற்றுள்ளது.
1942ம் ஆண்டு துவக்கப்பள்ளியாக ஆரம்பிக்கப்பட்ட இப்பள்ளி 1960ம் ஆண்டு நடுநிலைப்பள்ளியாக மாற்றம் அடைந்தது. சிந்துபூந்துறை அருகிலுள்ள சில பகுதிகளை சேர்ந்த மாணவர்களும் இப்பள்ளியில் படித்ததால் கட்டிட விரிவாக்கம் செய்ய மாநகராட்சி முடிவு செய்தது. 1996ம் ஆண்டில் இப்பள்ளியில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டன.
நல்ல நிலையில் இயங்கி கொண்டிருந்த இப்பள்ளி காலப்போக்கில் மாநகராட்சி அரசியலில் சிக்கியதால் மெல்ல் மெல்ல களையிழந்தது.
2003ம் ஆண்டில் இருந்தே இப்பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை இறக்குமுகமாக மாற துவங்கியது. அவ்வாண்டில் 26 மாணவர்கள் படித்த நிலையில் 2005ம் ஆண்டில் 23 ஆக குறைந்தது.
2007ல் 14 மாணவர்கள் ஆக இது குறைந்தது. தற்போது இப்பள்ளியில் மொத்தம் ஆறு மாணவர்கள் மட்டுமே படித்து வருகின்றனர். இதில் 2ம் வகுப்பில் ஒருவரும், 4ம் வகுப்பில் 2 பேரும், 5ம் வகுப்பில் 2 பேரும், 7ம் வகுப்பில் ஒருவரும் படித்து வருகின்றனர்.
8ம் வகுப்பு வரை இருந்தாலும் 6 மாணவர்களுக்கும் பாடம் கற்று கொடுக்க ஒரே ஒரு டீச்சர் மட்டுமே உள்ளார். ஆனால் ஆசிரியர்களை விட சத்துணவு ஆயாக்களின் எண்ணிக்கை அதிகம். அதாவது 2 பேர் உள்ளனராம்.
அரசு கல்விக்காக எவ்வளவோ செலவு செய்து வரும் நிலையில் 6 மாணவர்கள் மட்டுமே படித்து வரும் இந்த பள்ளியின் நிலை பொதுமக்களை வெகுவாக பாதித்துள்ளது.
சிந்துபூந்துறைக்கு அருகில்தான் தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்ட் எனப்படும் பாளையங்கோட்டை உள்ளது. இந்த நிலையில் 6 மாணவர்கள் மட்டுமே படித்து வரும் ஒரு பள்ளிக்கூடம் நெல்லை மக்களிடம் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications