நாஞ்சில் சம்பத்தை தாக்கிய திமுக எம்.எல்.ஏவுக்கு சிறை !
கரூர்: மதிமுக கூட்டத்தில் புகுந்து அடிதடி, ரகளை செய்த குளித்தலை திமுக எம்.எல்.ஏ. மாணிக்கம் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
கரூர் மாவட்டம், குளித்தலையில் மதிமுக சார்பில் பேராளம்மன் கோவில் அருகே பொதுக் கூட்டம் நேற்று இரவு நடந்தது. இந்த பொதுக்கூட்டத்தில் மதிமுக கொள்கை விளக்க அணிச் செயலாளர் நாஞ்சில் சம்பத் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். மேலும் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது மாணிக்கம் தலைமையிலான திமுகவினர் மேடையை நோக்கி அரிவாள், தடி, கம்புகளோடு பாய்ந்தனர். அவர்கள் நடத்திய பயங்கர தாக்குதலில் சம்பத் மற்றும் அவருடன் இருந்த கட்சி நிர்வாகிகள் படுகாயமடைந்தனர்.
பொதுக் கூட்டத்தை காண வந்த கும்பலை நோக்கியும் நாற்காலிகளை அக்கும்பல் வீசியெறிந்தது. இதனால் கூட்டத்தில் இருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு ஆளுக்கு ஒரு திசையை நோக்கி பறந்தனர். கூட்டத்தில் கலந்து கொண்ட பலருக்கு அடி உதை விழுந்தது. இதனால் அந்த இடமே போர்க்களம் போல் காட்சியளித்து.
மேடையை நாசம் செய்த அந்த வன்முறை கும்பல் பார்வை அந்த வழியாக வந்த பஸ்கள் மீது திரும்பியது. இதனால் திருச்சியிலிருந்து கரூர் நோக்கி வந்த பஸ்கள் கண்ணாடிகளை உடைந்தனர். பஸ்ஸில் இருந்த பயணிகள் அலறிப்புடைத்து ஒட்டம் எடுத்தனர்.
தாக்குதலில் காயமடைந்த நாஞ்சில் சம்பத், மதிமுக நிர்வகிகள் பல்லவி ராஜா, பரணி மணி, பாலமுருகன் உள்பட 11 பேர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மநையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர் .
இந் நிலையில் மதிமுகவினரை தாக்கியதாக கூறி திமுக எம்எல்ஏ மாணிக்கம், அவரது தம்பி மகேந்திரன், அரசு வக்கில் சாகுல் அமீது உள்பட 9 பேரை குளித்தலை டிஎஸ்பி பாஸ்கரன் உத்தரவின் பேரில் குளித்தலை இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி கைது செய்தார்.
அதே போன்று திமுகவினரின் காரை உடைத்தாக கூறி குளித்தலை மதிமுக நகர செயலாளர் பல்லவி ராஜா மற்றும் மதிமுகவை சேர்ந்த 10 பேர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பின்பு அவர்களை குளித்தலை நீதி மன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர். அவர்களை 15 காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
அதன் பேரில் இரவோடு இரவாக மாணிக்கம், அவரது ஆதரவாளர்களையும் திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு ஜெயிலில் அடைத்தனர்.
கைது செய்ய கோரிய வைகோ:
முன்னதாக நாஞ்சில் சம்பத்தைத் தாக்கிய திமுக எம்.எல்.ஏவும், திமுகவினர் கைது செய்யப்பட வேண்டும் என மதிமுக பொது செயலாளர் வைகோ கோரினார்.
நேற்றிரவு அவர் விடுத்த அறிக்கையில்,
மதிமுக கொள்கை விளக்க அணிச் செயலாளர் நாஞ்சில் சம்பத் குளித்தலையில் பொதுக் கூட்டத்தில் பேசத் தொடங்கும்போதே தாக்கப்பட்டிருக்கிறார். திமுக எம்.எல்.ஏ. மாணிக்கம் தலைமையில் 200க்கும் மேற்பட்டவர்கள், பயங்கரமான ஆயுதங்களுடன் மேடை ஏறி தாக்கினார்கள்.
நாஞ்சில் சம்பத் மண்டை உடைந்து ரத்தக் காயம் ஏற்பட்டது. அவரை பாதுகாப்பதற்காக சூழ்ந்து நின்ற கழகத் தோழர்கள் படுகாயமுற்றனர்.
நாஞ்சில் சம்பத் பொழிச்சலூர், வத்தலகுண்டு பொதுக்கூட்டங்களிலும் தாக்கப்பட்டார். தாக்கப்பட்ட சம்பத் மீதே காவல்துறை பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்தது. மதுரை மத்திய சிறையிலும் அவர் தாக்கப்பட்டார்.
அமைதி வழி தேவையில்லை. வன்முறை பாதை தான் இனி பின்பற்ற வேண்டியது என்ற போக்கு எதிர்காலத்தில் விபரீதமான நிலைமைக்கே வழிவகுக்கும்.
குளித்தலையில் வன்முறை நடத்திய மாணிக்கம் எம்.எல்.ஏவும், ஆளுங்கட்சியினரும் கைது செய்யப்பட வேண்டும். எத்தகைய வன்முறை ஏவப்பட்டாலும் மதிமுக அறவழியில் நின்று அவற்றைச் சந்திக்கும். எங்கள் கருத்துப் பிரசாரத்தை யாராலும் தடுக்க முடியாது.
குளித்தலையில் 28ம் தேதி மதிமுக பொதுக்கூட்டம் நடைபெறும். அதில் நான் கலந்து கொள்கிறேன் என வைகோ கூறியுள்ளார்.