காரைக்காலில் ஐபி, ரா அதிகாரிகள்-புலிகள் குறித்து விசாரணை
காரைக்கால்: காரைக்காலில் விடுதலைப் புலிகளின் ஊடுருவல், நடமாட்டம் உள்ளதா என்பது குறித்து மத்திய உளவுப் பிரிவான ஐ.பி மற்றும் ரா பிரிவுகளின் அதிகாரிகள் ரகசிய விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
ராமநாதபுரம், தூத்துக்குடி கடல் பகுதிகளில் கண்காணிப்பு மிகத் தீவிரமாக இருப்பதால் புலிகள் காரைக்கால் வழியாக ஊடுருவலில் ஈடுபடுவதாக உளவுப் பிரிவுகளுக்கு தகவல் வந்தவண்ணம் உள்ளது.
புதுச்சேரி டி.ஜி.பி.கான் தலைமையில் எஸ்.பிக்கள் ஸ்ரீகாந்த், சிந்து பிள்ளை, பழனிவேல் ஆகியோர் காரைக்கால் நிரவியில் உள்ள ஓ.என்.ஜி.சி. அலுவலகம் வந்தனர்.
அங்கு கடல் பகுதியில் எண்ணெய் தோண்டுவது குறித்த ஆய்வு நடத்தி வரும் ஓ.என்.ஜி.சி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
கடல் பகுதியி்ல் மர்ம படகுகள் நடமாட்டம் உள்ளதா என அவர்கள் கேட்டறிந்தனர்.
இவர்களைத் தொடர்ந்து மத்திய உளவுப் பிரிவான இன்டலிஜென்ஸ் பீரோ அதிகாரிகளும், ஓ.என்.ஜி.சி. ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.
பின்னர் ரா அதிகாரிகள் சகிதமாக காரைக்கால் கடலோர கிராமங்களில், விடுதலை புலிகள் நடமாட்டம் உள்ளதா, என்பது குறித்து மீனவர்கள் மற்றும் பொது மக்களிடம் அவர்கள் விசாரித்தனர்.