சிங்கம்புணரி ஜல்லிக்கட்டில் இளைஞர் பலி-70 பேர் காயம்
சிங்கம்புணரி: சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே நடந்த ஜல்லிக்கட்டில் ஒருவர் பலியானார். 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
சிங்கம்புணரி அருகே உள்ள அரளிப்பாறை என்ற இடத்தில் உள்ள கோவிலில் ஆண்டு தோறும் மாசி மாதத்தில், ஐந்து நில நாட்டார்கள் சார்பில் திருவிழா கொண்டாடப்படும். அன்றைய தினம் ஜல்லிக்கட்டும் நடத்தப்படும்.
நேற்று கோவில் விழாவும் ஜல்லிக்கட்டும் நடத்தப்பட்டது. இதில், 214 காளைகள் கலந்து கொண்டன. 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாடுகளை அடக்க களம் புகுந்தனர்.
காளைகள அடக்குவதற்கு முன்பு பல்வேறு கட்டுப்பாடுகளை போலீஸார் விதித்திருந்தனர். மாடுகளுக்கும், வீரர்களுக்கும் மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டன.
முதல் மாடு அவிழ்த்து விடப்பட்டதும் அது சீறிக் கொண்டு பாய்ந்தது. அப்போது மாடு குத்தியதில், திருப்பத்தூர் அருகே உள்ள பரங்கிர்ணிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த செந்தில் (21) என்ற இளைஞர் உயிரிழந்தார்.
இதேபோல வெங்கலூர் விஜயசாரதி, சிங்கம்புணரி சுரேஷ் உள்ளிட்ட 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவர்களில் விஜயசாரதியும், சுரேஷும் படுகாயமடைந்ததால் மதுரைக்குக் கொண்டு செல்லப்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மற்றவர்களுக்கு ஜல்லிக்கட்டு நடந்த இடத்திலேயே டாக்டர் முத்துவீரலட்சுமி தலைமையிலான மருத்துவர் குழு சிகிச்சை அளித்தது.
திருவிழா மற்றும் ஜல்லிக்கட்டையொட்டி அரளிப்பாறை மலை முழுவதும் மக்கள் கூடியிருந்தாதல் அது பெரும் ஜனக் காடாக காட்சி அளித்தது.