திமுக கோஷ்டி பூசல்-அமைச்சரின் கார் உடைப்பு
கூடலூர்: திமுக கோஷ்டிப் பூசலால் அமைச்சரின் கார் உடைத்து நொறுக்கப்பட்டது.
திமுக உட்கட்சித் தேர்தலில் கோஷ்டிப் பூசல் கொடி கட்டிப் பறந்து வருகிறது. ஆங்காங்கே அடிதடி, வெட்டு, நடுரோட்டில் கட்டிப் புரண்டு சண்டை, கார்கள் உடைப்பு, தேர்தல் அதிகாரி முற்றுகை என 'ஜனநாயகரீதியில்' தேர்தல் நடந்து கொண்டுள்ளது.
இந் நிலையில் இந்த கோஷ்டிப் பூசலுக்கு கதர் வாரியத்துதுறை அமைச்சர் கா.ராமச்சந்திரனும் தப்பவில்லை. அவரது காரை எதிர் கோஷ்டி தாக்கி உடைத்தது.
ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க ராமச்சந்திரன் கூடலூர் வந்தார்.
அவரை திமுகவின் ஒரு கோஷ்டி தொரப்பள்ளியில் வரவேற்பு கொடுத்து அழைத்துச் சென்றது. அவரை பாரதிதாசன் வணிக வளாக அலுவலகத்தில் அமர வைத்தது அந்த கோஷ்டி.
பின்னர் திருமணத்திற்கு செல்ல தனது காருக்கு வந்தார் அமைச்சர்.
அப்போது தனது ஆதரவாளர்களுடன் அங்கு வந்தார் திமுக ஒன்றியச் செயலாளர் லியாகத் அலி.
அவர்கள் அமைச்சர் ராமச்சந்திரனை முற்றுகையிட்டு, கூடலூர் வரை வந்த அமைச்சர் இங்குள்ள திமுக ஒன்றிய அலுவலகத்திற்கு வராமல் எதிர் கோஷ்டி கூப்பிட்ட இடத்தில் போய் எப்படி உட்காரலாம் என அமைச்சரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அமைச்சரின் காரை போக விடாமல் தடுத்தனர். இதையடுத்து காரை அங்கேயே விட்டுவிட்டு தனது ஆதரவாளர்களுடன் நடந்து சென்று திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் அமைச்சர்.
இதையடுத்து அமைச்சரின் காரை லியாகத் அலியின் ஆதரவாளர்கள் தாக்கினர். அதில் அதன் கண்ணாடிகள் உடைந்தன.
இது குறித்து அறிந்த அமைச்சர் திருமண மண்டபத்தில் இருந்து இன்னொரு காரில் கிளம்பிச் சென்றார்.
இந்தக் காரையும் லியாகத் அலியின் ஆதரவாளர்கள் வழி மறித்தனர். இதையடுத்து அவர்களை போலீசார் அடித்து விரட்டினர்
இச் சம்பவம் தொடர்பாக அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரி மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில் திமுக ஒன்றியச் செயலாளர் லியாகத் அலி உள்பட 20 திமுகவினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதே போல் லியாகத் அலி கொடுத்த புகாரின் பேரில் அமைச்சரின் ஆதரவாளர்கள் 4 பேர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications