சொத்து: ஜெ. மனு தள்ளுபடி-மார்ச் 17 முதல் சாட்சிகள் விசாரணை
சென்னை: ஜெயலலிதா மீதான சொத்து வரி வழக்கை ரத்து செய்ய நீதிமன்றம் மறுத்துவிட்டது. மேலும் இந்த வழக்கில் வரும் மார்ச் 17ம் தேதி முதல் சாட்சிகள் விசாரணை தொடங்கும் என்றும் அறிவித்தது.
கடந்த 1997ம் ஆண்டு அதிமுக பொதுச் செயலாளக் ஜெயலலிதா மீது வருமான வரித் துறையினர் சென்னை எழும்பூர் பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் ஒரு வழக்கை தாக்கல் செய்தனர்.
அதில், 93-94ம் ஆண்டிற்கான சொத்து வரிக் கணக்கை ஜெயலலிதா தாக்கல் செய்யவில்லை. இதனால் வருமான வரி சட்டத்தின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரினர்.
இந்த வழக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருந்தது. இந்த வழக்கையே ரத்து செய்ய வேண்டும் என்று கோரி ஜெயலலிதா சார்பில் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதை எதிர்த்து வருமான வரித்துறை மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கு மாஜிஸ்திரேட் ஆர்.பிரேம்குமார் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது ஜெயலலிதா சார்பில் ஆஜரான வழக்கறிஞரான அதிமுக எம்பி ஜோதி, சொத்து வரி தொடர்பான அப்பீல் மனு நிலுவையில் இருப்பதால் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றார்.
வருமான வரித்துறை சார்பில் வழக்கறிஞர் ராமசாமி ஆஜராகி வாதாடுகையில், இந்த வழக்கில் சாட்சிகள் விசாரணை நடக்கவில்லை, வழக்கு தொடர்பான ஆதார சான்றுகளும் தாக்கல் செய்யப்படாமல் வழக்கு ஆரம்பக்கட்ட நிலையிலேயே உள்ளது. எனவே வழக்கை ரத்து செய்யக்கூடாது என்றார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட மாஜிஸ்திரேட் ஜெயலலிதாவின் மனுவை தள்ளுபடி செய்தார்.
அவர் மீதான சொத்துவரி வழக்கை ரத்து செய்ய முடியாது என்று அறிவித்த மாஜிஸ்திரேட் இந்த வழக்கில் வரும் மார்ச் மாதம் 17ம் தேதி முதல் சாட்சிகள் விசாரணை தொடங்கும் என்றும் அறிவித்தார்.
93-94ம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்யவில்லை என்றும் குற்றம்சாட்டி ஜெயலலிதா மீது இன்னொரு வழக்கு விசாரணையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications