ரயில்வே வேலை-போர்ட்டர்கள் கொண்டாட்டம்
சென்னை: உரிமம் பெற்ற ரயில்வே போர்ட்டர்கள், 4ம் நிலை ஊழியர்களாக அங்கீகரிக்கப்படுவார்கள் என்ற ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவின் அறிவிப்புக்கு நாடு முழுவதும் உள்ள போர்ட்டர்கள் பெரும் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.
ரயில் நிலையங்களில் போர்ட்டர்கள் லாலுவை வாழ்த்தி கோஷமிட்டும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
இன்று லாலு தாக்கல் செய்த ரயில்வே பட்ஜெட்டில், நாடு முழுவதும் உள்ள உரிமம் பெற்ற போர்ட்டர்கள், ரயில்வே துறையின் 4ம் நிலை ஊழியர்களாக அங்கீகரிக்கப்படுவார்கள் என அறிவித்தார்.
கூலிகளுக்கு கேங் மேன்களாக பதவி உயர்வும், கேங் மேன்களுக்கு ஆளில்லா ரயிலேவே கிராசிங்கில் வேலையும் தரப்படும் என அறிவித்தார் லாலு.
இந்த அறிவிப்புக்கு போர்ட்டர்கள் பெரும் உற்சாகத்தோடு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
சென்னை சென்டிரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் உள்ள உரிமம் பெற்ற போர்ட்டர்கள், லாலு அறிவிப்பை சந்தோஷத்துடன் வரவேற்பதாக தெரிவித்துள்ளனர். இனிப்புகள் வழங்கி இதைக் கொண்டாடினர்.
இதேபோல லாலுவின் சொந்த மாநிலமான பீகார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் லாலுவின் அறிவிப்புக்கு போர்ட்டர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.