For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மலேசியாவில் தீவிர தேர்தல் பிரசாரம்: தமிழர் ஓட்டுக்கள் யாருக்கு?

By Staff
Google Oneindia Tamil News

கோலாலம்பூர்: மலேசியாவில் மார்ச் 8ம் தேதி நடைபெறவுள்ள தேர்தலுக்கான பிரசாரம் சூடு பிடித்துள்ளது. தமிழர்களின் ஓட்டுக்களைக் குறி வைத்து தேர்தல் களத்தில் குதித்துள்ள 1500க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் அனல் பறக்க பிரசாரம் மேற்கொண்டுள்ளனர்.

தற்போது ஆட்சிப் பொறுப்பில் இருந்து வரும் பாரிசன் தேசியக் கூட்டணியும், எதிர்க்கட்சிக் கூட்டணியும் காரசாரமாக பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. தமிழர்களின் வாக்குகளை யார் பெறப் போவது என்பதில்தான் வெற்றி அடங்கியுள்ளது என்பதால் தமிழர்களின் வாக்குகளை அள்ளும் முயற்சியில் இரு கூட்டணிகளும் போட்டி போட்டுக் கொண்டு களம் இறங்கியுள்ளன.

தற்போதைய பிரதமர் அப்துல்லா படாவி கடந்த 2004ம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று முதல் முறையாக ஆட்சி அமைத்தார். அப்போது அவரது கூட்டணிக்கு 199 எம்.பி சீட்களில் வெற்றி கிடைத்தது. 1990ம் ஆண்டுக்குப் பிறகு ஒரு ஆளுங்கட்சிக் கூட்டணிக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி அது.

இந்த நிலையில் 2வது முறையாக பிரதமர் பதவியைப் பிடிக்க களம் கண்டுள்ளார் படாவி.

மலேசிய நாடாளுமன்றத்தில் 220 சீட்கள் உள்ளன. இதில் 7 இடங்களில் ஆளும் பாரிசன் தேசியக் கூட்டணியின் வேட்பாளர்கள் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டு விட்டனர். எனவே மீதம் உள்ள 215 தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறவுள்ளது. அனைத்துத் தொகுதிகளிலும் எதிர்க்கட்சிக் கூட்டணியினர் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளனர். 37 சுயேச்சைகளும் களத்தில் உள்ளனர்.

இதேபோல மொத்தம் உள்ள 506 மாகாண சட்டசபை தொகுதிகளுக்கு பாரிசன் தேசியக் கூட்டணி சார்பில் 502 பேர் களத்தில் உள்ளனர். எதிர்க்கட்சி தரப்பில் 539 பேர் களம் கண்டுள்ளனர். 66 பேர் சுயேச்சைகளாக களத்தில் உள்ளனர்.

பாரிசன் தேசியக் கூட்டணிக்குக் கடும் போட்டியாக எதிர்க்கட்சித் தரப்பில் ஜனநாயக நடவடிக்கைக் கட்சி, பார்டி இஸ்லாம் செ மலேசியா, பார்ட்டி கீதிலான் ரக்யத் ஆகிய கட்சிகள் உள்ளன.

ஆளும் கூட்டணிக்கு ஐக்கிய மலாய் தேசிய இயக்கம், மலேசிய சீன சங்கம், மலேசிய இந்திய காங்கிரஸ் ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ளன. இந்த மூன்று முக்கிய கட்சிகளின் ஆதரவுடன்தான் மலேசியா சுதந்திரம் பெற்றது முதல் பாரிசன் தேசியக் கூட்டணி ஆட்சி புரிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த முறை பாரிசன் தேசியக் கூட்டணிக்கு பெரும் சவால்கள் காத்துள்ளன. தமிழர்களின் போர்க்கொடியால் நிலவும் பதட்டம், தமிழரக்ளுக்கு எதிராக படாவி அரசு செயல்படுவதாக நிலவும் கருத்து, பொருளாதார சீரமைப்பில் காணப்படும் தொய்வு நிலை, அதிகரித்து வரும் விலைவாசி உயர்வு ஆகியவை முக்கிய தேர்தல் பிரச்சினைகளாக கருதப்படுகின்றன.

தாங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாகவும், மலாய் மற்றும் சீனர்களுக்கு நிகராக தங்களை அரசு நடத்தவில்லை. கல்வி, வேலைவாய்ப்பில் தாங்கள் சம அளவில் நடத்தப்படவில்லை என்ற அதிருப்தி தமிழர்களிடையே உள்ளது.

இதை முன்வைத்து கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக மலேசியாவில் வாழும் தமிழர்கள் பல்வேறு வகையான போராட்டங்களையும் நடத்தியுள்ளனர். இந்தப் போராட்டங்களை படாவி அரசு அடக்குமுறையைப் பயன்படுத்தி அடக்கியது, போராட்டத்தில் ஈடுபட்ட ஹிண்ட்ராப் நிர்வாகிகளை அடக்குமுறைச் சட்டமான உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தது ஆகியவை தமிழர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக பெரும்பாலான தமிழர்களின் வாக்குகள் இம்முறை ஆளுங் கூட்டணிக்கு கிடைக்குமா என்பது பெரும் சந்தேகம்தான். எனவே தேர்தல் முடிவுகள் படாவி தலைமையிலான கூட்டணிக்கு சாதகமாக இருக்காது என்றும் கருத்து நிலவுகிறது.

இப்படி பல்வேறு வகையான சிக்கல்கள், நெருக்கடிகளுக்கு மத்தியில் வேட்பாளர்கள் அனைவரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். மலேசியாவின் அனைத்துப் பகுதிகளிலும் கட்சிக் கொடிகளும், சின்னங்கள், வேட்பாளர்கள், தலைவர்கள் படம் இடம் பெற்ற பேனர்களும், கட் அவுட்களும் நீக்கமற நிறைந்து காணப்படுகின்றன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X