சீனா வசம் 90,000 சதுர கி.மீ இந்தியப் பகுதி!
டெல்லி: அருணாச்சசலப் பிரதேச மாநிலத்தின் தவாங் உள்பட இந்தியாவுக்கு உட்பட்ட 90 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பகுதிகளை சீனா சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளது என்று மத்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக லோக்சபாவுக்கு அவர் அளித்துள்ள எழுத்துமூலமான பதிலில், அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. இதை சீனாவுக்கு தெளிவாக சொல்லியுள்ளோம்.
இந்தியாவுடனான தனது சர்வதேச எல்லை குறித்து பிரச்சினை கிளப்பிக் கொண்டிருக்கிறது சீனா.
1993ம் ஆண்டு முதல் இரு அரசுகளும், எல்லைப் பகுதியில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை பராமரிப்பது என்பதில் உறுதியுடன் செயல்பட்டு வருகின்றன. இரு நாட்டு படைகளும் தங்களது எல்லைப் பகுதியைத் தாண்டக் கூடாது என்று ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன.
இரு நாட்டு கூட்டுக் குழுக்கள், நிபுணர் குழுக்கள், எல்லை படையினரின் சந்திப்புகள், தூதரக ரீதியிலான பேச்சுக்கள் மூலம் எல்லைப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது என இரு நாடுகளும் ஒத்துக் கொண்டுள்ளன என்று கூறியுள்ளார் முகர்ஜி.