நாளை மத்திய பட்ஜெட்: பொருளாதார வளர்ச்சியி்ல் சரிவு
இந்த பட்ஜெட்டில் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் ரூ.32,000 கோடி கூட்டுறவுக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படலாம் எனத் தெரிகிறது.
தமிழகத்தில் திமுக ஆட்சி்க்கு வந்தவுடன் செய்யப்பட்ட இந்த கடன் தள்ளுபடியை நாடு முழுவதும் செய்ய வேண்டும் என்று மத்திய அரசை முதல்வர் கருணாநிதி வலியுறுத்தி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் இன்று விவசாயிகள் பிரச்சனைகளை முன் வைத்து பாஜக உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் நாடாளுமன்றத்தில் அமளியில் இறங்கியதால் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.
விவசாயிகள் கடன் தள்ளுபடி அறிவிப்பு மூலம் அவர்களது ஓட்டுக்களை காங்கிரஸ் கூட்டணி 'லபக்' செய்ய முயல்வதால், பீதி அடைந்துள்ள பாஜக கூட்டணி, திடீரென விவசாயிகள் பிரச்சனைகளை கையில் எடுத்துள்ளது.
அதே போல வருமான வரி விஷயத்தில் பிழிந்து எடுக்கப்படும் மாத ஊதியம் வாங்குவோரி்ன் எரிச்சலை சம்பாதித்து வரும் மத்திய அரசு, அதில் வருமான வரி விலக்கு உச்ச வரம்பை மேலும் உயர்த்தலாம் எனத் தெரிகிறது.
வருமான வரி விலக்கு உச்சவரம்பு 1.3 லட்சமாக உயர்த்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
அதே போல மத்திய அரசு ஊழியர்களுக்கான 6வது சம்பளக் கமிஷன் அறிக்கை ஏப்ரல் மாதம் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதற்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.
பொருளாதார வளர்ச்சியில் சரிவு:
இதற்கிடையே இன்று தேசிய பொருளாதார நிலையை விளக்கும் எகனாமிக் சர்வேயை ப.சிதம்பரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார் (அவைகள் ஒத்தி வைக்கப்படும் முன்).
அதில், இந்தாண்டு தேசிய பொருளாதார வளர்ச்சி விகிதம் 8.7 சதவீதமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 9.6 சதவீதம் அளவுக்கு இருக்கும் என மதி்ப்பிடப்பட்டிருந்தது. ஆனால், இதில் சரிவு ஏற்பட்டுள்ளது.
மேலும் சர்க்கரை, உரம், மருந்துகள், நிலக்கரித்துறையில் முதலீடுகளை அதிகரிக்கும் வகையில் விதிகளை தளர்த்தலாம் என்று கூறப்பட்டுள்ளது.
அதே போல பெருநகரங்களில் பேருந்து, ரயில் போக்குவரத்து தனியாரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதற்கு தொழிற்சங்கள், இடதுசாரிகள், கூட்டணிக் கட்சிகளிடம் கடும் எதிர்ப்பு கிளம்பலாம்.
நாட்டின் பண வீக்க விகிதம் 4.4 சதவீதமாக உள்ளதாகவும் அந்த சர்வேயில் கூறப்பட்டுள்ளது.