ரெளடிகளுக்கு 'பாடம்'-போலீசின் 'ஆன் த ஸ்பாட்' ஆக்ஷன்
சென்னை: வட சென்னையில் பெண்களை கேலி செய்த போதைக் கும்பல்கள், ரெளடிக் கும்பல்களை அந்ததந்த இடங்களிலேயே வைத்து உதைத்தனர் போலீசார்.
வட சென்னையில் எப்போதுமே ரவுடிகளின் தொல்லை அதிகம். இது இப்போது எல்லை தாண்டி வருகிறது. போதையில் பெண்களை கேலி செய்வது, சீண்டுவது, ஆபாச வர்ணனை செய்வது என இந்தப் பகுதியில் தொல்லை அதிகம்.
இது குறித்து தொடர் புகார்கள் வந்ததால் துணை போலீஸ் கமிஷனர் சம்பத் நடவடிக்கையில் இறங்கினார். செம்பியம் உதவி போலீஸ் கமிஷனர் ராஜாராம், இன்ஸ்பெக்டர் சிவமணி ஆகியோர் தலைமையில் டீம் அமைத்து திடீர் ரெய்டுக்கு அனுப்பினார்.
நேற்று மாலை செம்பியம் பகுதியில் ஜோதிராமலிங்க அடிகளார் தெரு, பண்டிதர் தெரு சந்திப்பு முனையில் இரு சக்கர வாகனங்களை குறுக்கும் நெடுக்குமாக நிறுத்திவிட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவிகளை கிண்டலடித்துக் கொண்டிருந்த கும்பலை முதலில் இந்த டீம் வளைத்தது.
இதில் பலர் குடிபோதையில் இருந்தனர். இவர்களை கைது செய்வது, ஜாமீனில் விடுவது என்று இழுத்தடிப்பு எல்லாம் செய்யாமல் ஆன் த ஸ்பாட்டிலேயே போலீசாரின் 'கவனிப்பு' கிடைத்தது.
இந்த ரோமியோக்களை அந்த இடத்திலேயே வைத்து உதைத்தனர் போலீசார். அடி, உதை தாங்காமல் நாலாபக்கமும் சிதறி ஓடிய இவர்களை விரட்டி விரட்டி அடித்தனர் போலீசார்.
இதில் ரவுடிகள் என அடையாளம் காணப்பட்டவர்களை மட்டும் வேனில் 'அள்ளிப் போட்டுக்' கொண்டு அம்பேத்கார் தெருவுக்கு வந்தனர் போலீசார்.
அங்கு ரோட்டில் சேர் போட்டு போக்குவரத்துக்கு இடைஞ்சல் செய்தபடி பேசிக் கொண்டிருந்த குடும்பத்தினருக்கு திட்டு விழுந்தது. அங்கு வெட்டியால் சவுண்டு விட்டுக் கொண்டிருந்த ஒரு குடிமகனுக்கும் அறை விழுந்தது.
இதையடுத்து பெரம்பூர், திரு.வி.க. நகர், கொளத்தூர், எம்.கே.பி.நகர், கொடுங்கையூர் உள்ளிட்ட பகுதிகளிலும் போலீசார் ரோடு ரோடாக வலம் வந்த போலீசாரிடம் பெண்களை கேலி செய்து கொண்டிருந்த பலருக்கும் ஏகத்துக்கும் உதை கிடைத்தது.
மேலும் தெருவுக்கு தெரு முளைத்துள்ள பல குட்டி ரவுடிகளையும் ரவுண்டி கட்டி அழைத்துச் சென்ற போலீசார் காவல் நிலையத்தில் வைத்தும் நன்றாக 'கவனித்து' வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர்.
மீண்டும் சிக்கினால் ஜெயில் உறுதி என இவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த ரெய்டுகள் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.